பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12. தேவர் கண்ட நாடு

சீரும் சிறப்பும் மிக்கது நம் செந்தமிழ் மொழி. இக் காரணங்கண்டே இதன்பால் ஆர்வமும் அன்பும் கொண்டு இதனைப் பயின்றவர் பலர். அப்பலர் இனத்தாலும், சமயத்தாலும் வேறுபட்ட கொள்கையினர் ஆவர். இங்ங்னம் வேறுபட்டவராயினும், அவர்கள் இம்மொழியை வளம்படுத்தவோ, இதற்குப் பணி பல புரியவோ, நூல் பல யாக்கவோ பின்வாங்கியவர் அல்லர். இம் முறையில் பண்ணியல் தமிழ்க்குப் பணி புரிந்தவருள் சைனரும் அடங்குவர். அவர்கட்குத் தமிழ் நாட்டவர் என்றென்றும் கடமைப்பட்டவர் என்று கூறல் மிகையாகாது.

சமணப்புலவர்_ பெருமக்களுள் திருத்தக்க தேவரும் ஒருவர். இவர்க்கு அமைந்த அடைமொழிகளின் சிறப்பினின்றே இவ்வறிஞர் பெருமானாரது மாண்பினை நன்கு உணரலாம். இவர் துறவுக் கோலம் பூண்ட தூயர். இவர் பெருந்துறவியராதலின், பேரின்ப நிலையைப் பேசுந்திறத்தினர் போலும் ! காவியம் பாடிக் கவிஞரைக் களிக்கச் செய்யும் ஆற்றல் அற்றவராய் இருப்பர் போலும் : என்று எண்ணுவதற்கு இடங் கொடாதவர் என்பதைக் காவியச் சுவை கனிந்து ஒழுகும் வண்ணம் சீவக் சிந்தாமணி என்னும் சீரிய நூலைச் செய்திருப்பதினின்றும் அறிந்து கொள்ளலாம்.

இவர் சொல்லையும் பொருளையும் எடுத்து ஆண்ட புலவர் பலர், புலவர் பெருமானார் சேக்கிழார்க்கும், கல்வியில் பெரியராம் கம்பர்க்கும், ஆற்று வளன், நாட்டுவளன், நகர்வளன் எவ்வெம் முறையில் கூறுவது என்பதை எடுத்துக் காட்டியவர் தேவரே எனில், வேறு என் கூறுவது! இக் கூற்றின் உண்மையை அப்புலவர் பெரு மக்கள் பாடியுள்ள