பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. திருமுகப் பாசுரம்

செம்மை சான்ற திருந்திய மொழிகளில் தன்னேரில்லாத் தகைமையொடு விளங்குவது நந்தம் தண்டமிழ் மொழி என்பது எவர்க்கும் ஒப்பமுடிந்த முடிபாகும். இம் மொழி சிறந்து விளங்குவதற்கு உரிய காரணங்கள் பலவாக இருப்பினும், அவற்றுள் ஒன்று இம்மொழி இலக்கண இலக்கியங்களைப் பெற்றுத் திகழ்வதனாலேயே என்க. நந்தம் செந்தமிழ் இலக்கிய இலக்கணங்களில் தலை சிறந்தது என்பதை மேனாட்டு அறிஞர்கள் பலரும் ஒரு முகமாகக் கூறியிருப்பதிலிருந்து நன்கு உணர்ந்து கொள்ளலாம் “இலக்கியப் பெருமையில் இலத்தீன் மொழியையும் வெல்ல வல்லது தமிழ்” என்று வின்ஸ்லோ பெருமகனார் கூறி இருப்பதை ஒரு சான்றாகக் காட்டலாம். இத்தகைய பெருமை மிக்க மொழியில் கடித அமைப்பில் அமைந்த இலக்கியத்தினைப் பற்றிச் சிறிது ஆராய்தலே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

கடிதம் என்னும் பொருள் கொண்ட சொற்கள் முடங்கல், திருமுகம், மடல், ஒலை முதலியன. இங்ஙனம் ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்கள் இருத்தலை நோக்குங்கால், கடிதம் எழுதுதலில் நம்மவர்கள் தலை சிறந்து விளங்கினர் என்பதையும், அக்கடிதங்கள் வெறும் செய்திகளை அறிவிக்கும் திருமுகங்களாக மட்டும் இன்றி, பொருட் செறிவுடைய மடல்களாகவும் திகழ்ந்தன என்பதையும் சிலப்பதிகாரம், சிந்தாமணி, திருமுறைகள், தனிப் பாடல் திரட்டு போன்ற நூல்களில் பரக்கக் காணலாம்.

இத் திருமுகங்கள் மேற்கு நாட்டு அறிஞர்கள் போற்றுகின்ற செஸ்டர்பீல்டு, சிஸ்ரியோ, ஷில்லர்,