பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு’—சிவ
புராணம் ‘நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த

நாயகனை—திருக்கோத்தும்பி

இந்தக் கருத்தைக் கருத்தில் கொண்டேதான் திருக்கோவையாரிலும்,

“நாய்வயின் உள்ள குணமும் இல்லேனை நற் றொண்டு
                                                              கொண்டு

தீவயின் மேனியன்”

என்று ஆசிரியர் மொழிவார் ஆனார். இவ்வாணித்தரமான அகச்சான்றுகளால் மாணிக்கவாசகரே திருக்கோவையாரின் ஆசிரியர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளங்குகிறது.

இங்ஙனம் இருக்க, வாதவூர்ச் சிவபாத்தியன் திருக்கோவையாரைப் பாடினார் என்ற ஐயம் எழுந்தமைக்குக் காரணம், நம்பியாண்டார், “வாதவூர்ச் சிவபாத்தியன் செய்திருச் சிற்றம்பலப் பொருளார் தரு திருக்கோவை” என்று பாடி இருப்பதாகும். ஈண்டும் சிவபாத்தியர் என்பவர் மாணிக்கவாசகரே.

திருக்கோவையார் கவிநயம்

திருக்கோவையாரில் உள்ள நானூறு பாடல்களும் நனி சிறந்த பாடல்கள். ஆதலின், எல்லாப் பாடல்களின் சொல்நயம் பொருள் நயங்களை எடுத்து இயம்புதல் எளிதன்று. என்றாலும், ‘பானைச் சோற்றிற்கு ஒரு சோறு பதம்’ என்னும் முதுமொழிக்கிணங்க, அந்நானூறு பாடல்களின் கருத்துக்களில் ஈங்கொன்று ஆங்கொன்றாகச் சிலவற்றையே ஈண்டெடுத்து இயம்புதல் நன்றன்றோ.

கோவையில் குறிப்பிடும் மணமகன் மணமகளை அகப்பொருள் இலக்கணப்படி தலைவன் தலைவி என்று குறிப்பிடுவது மரபாகும். அம்முறைக்கிணங்க