பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


வெளியில் வந்தனள். வருகின்றபோதே அவளது நீல நறு நெய்தல் மலர்போலும் மையுண்ட கண்களிலிருந்து நீர்த்துளிகள் நித்திலங்கள் உதிர்வன போல மார்பகம் நனைய உகுத்த வண்ணம் இருந்தன. பரணர் இத்துயாமுற்ற கோலத்தைக் கண்டனர். கபிலர் போல யாதொரு மொழியையும் கண்ணகியை வினவாது. அடி பெயர்த்து அப்பாற் செல்ல ஒருப்பட்டிலர். "இங்ஙனம் இம்மாது அழக் காரணம் என்னவாக இருக்குமோ? அதனை உசாவவேண்டும்" என உறுதி கொண்டனர். மெல்ல அம்மாதின் சந்திரவதனத்தை நோக்கினர். "அம்மணி! நீ யாவள்? எம் உழுவல் அன்புடைக் கெழுதகை நண்பன் பேகன் என்பானுக்கும் நினக்கும் உறவுமுறை ஏதேனும் உளதோ? அவன் பெயரைக் கூறிய மாத்திரையில் இங்ஙனம் உளங்குழைந்து உயங்குகின்றனையே. உண்மை கூறு." என்று வினயமாக வினவினர். பெரியர் பேசுகையில், அவர் விடுத்த வினாவிற்கு விடை இறுக்காது இருத்தல், முறையன்று என்று ஓர்ந்தவளாய், காந்தள் மொட்டுப் போலும் விரலாலே தன் கண்ணீரினைத் துடைத்துக் கொண்டு, "அன்பும் அறிவும் சான்ற ஆன்றவரே ! யான் எங்ஙனம் எம் கொழுநர்க்கு உறவினள் ஆவேன்? யான் உறவினள் ஆயின், அவர் என்னை விடுத்து வேறொருத்தியின்பால் வாழ எண்ணியிருப்பாரோ? இரார்" என்று நாகரிக முறையில் உண்மைச் செய்திகளைச் சொல்லிவிட்டனள். இந்த மொழிகளைக் கேட்டதும் பரணர் வருத்தமுற்றனர். பேகன் செயல் அடாதது என்பதை உணர்ந்தனர். அப்பேகன் வாழ்ந்த இடத்தை நேரே அடையப் புறப்பட்டனர். பேகனைக் கண்டனர். கண்டவற்றை விண்டனர். "பேக! நீ இப்பொழுதே இவணின்று அவண் போந்து அவட்கு அருள் பண்ணுக. இங்ஙனம் பண்ணாயாயின், அதுமிகக் கொடிது" என்று இடித்து மொழிந்தனர்.

க 4