பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

எல்லாம் வல்ல இறைவன் தனக்குமேல் ஒரு பொருளையும் பெற்றிராமல், தானே முதன்மையானவனாக விளங்குதலின், அவன் ஆதி என்று கூறப்படுவதல் உண்மையாகும் அன்றோ? “முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி” என்ற வாகீசப் பெருமானார் வாக்கையும், “முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே” என்னும் வாதவூர் அடிகளார் கூறியுள்ளதையும் ஈண்டுப் பொருத்திக் காணலாம்.

இறைவனுக்கும் சீவனுக்கும் வேறுபாடு உண்டு. இவ்வேறுபாட்டை உணர்த்தவே இறைவனுக்குச் சில குணங்கள் இருப்பனவாக அறிஞர்கள் கற்பித்துக் கூறியுள்ளனர். தன் வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர் அருள் உடமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை என்ற எண்குணங்களே யுடைமையால் அவன் எண் குணத்தினான் என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இங்ஙனமே சுந்தர மூர்த்திகள் இறைவனை ‘எண்குணத்தினானை’ என்று பாடியுள்ளார். இப்படி இவ்வருளாளர் கூறுதற்குக் காரணம் நம் வள்ளுவனர் தம் திருவாயால் இறைவனை “எண்குணத்தான்” என்று கூறிப் போந்தமையே அன்றி வேறன்று.

தூய அறிவன்; பேர் அறிவன் இறைவன். நாமோ சிற்றறிவினர்; தூய்மை அற்ற அறிவினர். அதனால்தான் வள்ளுவனார் வால் அறிவன் என்று வழுத்தினார் இறைவனை. இந்த உண்மையினால் அன்றோ “பேர் அறிவே இன்பப் பெருக்கே” என்றனர் தாயுமானார்!

இறைவன் கற்பனை கடந்த சோதியாக இருந்தாலும், கருணையே உருவமானவன். இப்பண்-