பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


படைப்பாசிரியர்களையும் ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கு சதக்கத்துல்லா அப்பா பெயரில் பரிசளித்துப் பாராட்டி மகிழ்கிறார்.

சிறப்புமிகு இச்செயல்கள் அனைத்தும் தம்மோடு நின்று விடக் கூடாது, என்றென்றுமாக நடைபெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சீதக்காதி அறக்கட்டளை, அகில இந்திய இஸ்லாமிய நிறுவனம், ஐக்கியப் பொருளாதாரப் பேரவை, ஐக்கியப் பொருளாதாரப் பேரவை டிரஸ்ட், அனைத்திந்திய ஐக்கியப் பொருளாதாரப் பேரவை கூட்டமைப்பு முதலான அறக் கட்டளைகளை நிறுவி, அவற்றின் அறங்காவலராகவும் அமைந்து தொண்டாற்றி வருகிறார்.

இவரது கல்விப் பணியாயினும் தமிழ்ப் பணியாயினும் அனைத்துச் சமுதாய மக்களுக்கென அமைந்து வருவது, இவரது சமய நல்லிணக்க உணர்வுக்குக் கட்டியங் கூறுவதாகும்.

இத்தகு பெருமைமிகு பெரும் பணியைத் தளராது நாளும் ஆற்றி வரும் அன்னாரின் சமுதாயத் தொண்டு இன்று அவரொத்த பலரையும் ஊக்கி வருகிறது. இப்பணிகள் அனைத்தும் வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டுநெறிகளாகக் கொண்டுச் செல்லத் தக்கவையாகும்.

உமறுப் புலவரின் சீறாப்புராணம் மூலம் வள்ளல் சீதக்காதி வாழ்ந்து கொண்டிருப்பதுபோல் புரவலர் பெருந்தகை, பவழ விழாச் செல்வர் பி. எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள் இப்பேரகராதி மூலம் காலமெல்லாம் வாழ்வார் என்பது திண்ணம்.

இவரது அளப்பரிய பணி கண்டு வியந்து நிற்கும் நான், எனது அரும் படைப்பான இக் கணினி களஞ்சியப் பேரகராதி பெருநூல் மூலம் பவழ விழா செல்வர் அல்ஹாஜ் பி. எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களின் தொண்டும் சிந்தனையும் என்றென்றும் நிலைபெற அன்னாரின் அருந்தொண்டுக்கு இந்நூலை நினைவுக் காணிக்கையாக்குகிறேன்.

அன்பன்

மணவை முஸ்தபா

நூலாசிரியர்