கண்ணகியின் கதை
பாட்டு
பாங்கியே தேவந்தீ!பகருமுரை கேளாய்
தூங்கிய நேற்றிரவு தோன்றிய கனாவை
உன்னிடம் சொல்லாமல் உள்ளமது தேறேன்
என்னுடைய அன்பரும் யானும்கை கோத்தோம்
இந்தககர் நீங்கிவே றுற்றநகர் கண்டோம்
அந்தநகர் மக்களெமை அடாப்பழி சுமத்த
அன்பரெம் கணவர்க்குத் துன்பம்வந்த தையோ!
துன்பமது கண்டியான் புழுப்போல் துடித்தேன்
இடுதேள் விழப்பெற்ற ஏந்திழை போலே
படுதுன்பம் அளவில்லை பதறித் துடித்தேன்
தீங்கைப் பொறுக்காது தீரமனம் கொண்டேன்
பாங்கான வேந்தனின் ஓங்குசபை யுற்றேன்
கண்ணான கணவர்க்கு நண்ணுதீங் குரைத்தேன்
மன்னவை வழக்காடி இழுக்கினை யொழித்தேன்
என்னாலே மன்னர்க்கும் நகருக்கும் இன்னல்
நன்னகர முற்றுமே நாசமுற் றதுவே
இக்கனவு எக்கேடு இழைக்குமோ அறியேன்
தக்கபடி இக்கனாப் பயனேது சாற்றுவாய்
எனக்கேட்ட கண்ணகிக்(கு) இனியமொழி சொல்வாள்
மனக்கினிய தோழி!யான் மதியொன்று சொல்வேன்
கண்டகன வாலே கலக்க மடையாதே
கொண்டகண வனால்நீ கொள்ளுதகை யுள்ளாய்,
சற்றும் வெறுக்கப் பட்டவள்நீ அல்லை
பெற்றமுற் பிறவியில் பேணுதவ நோன்பைத்
தவறினாய் ஆதலால் இத்தீங்கு சார்ந்தாய்
கவலையொழி தோழியான் கழறுமுரை கேட்பாய்
காவிரியின் சங்கமுகம் அதனிலே காணும்
பூவிரியும் இருகுளம் பொற்புடனே மாணும்