பக்கம்:கண்ணகி தேவி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

63


நிமித்திகன் இங்ஙனம் கூறியதற்குச் செங்குட்டுவன் இசைந்து, தன் வாளையும் குடையையும் வடதிசைப் பெயர்த்து, நாட்கொள்ளும்படி கட்டளையிட்டான். அவ்வாறே ஐம்பெருங்குழு எண்பேராயம் எனப்படும் சபையோர்களும், கரும வினைஞர், கனக்கியல் வினைஞர் முதலிய அரசாங்க நிர்வாகிகளும் சேர்ந்து, பல்வகை வாத்தியம் முழங்கப் பட்டவர்த்தனக்களிற்றின் மேல் ஏற்றிய அரசவாளையும் வெண்கொற்றக் குடையையும் வஞ்சியின் வடதிசைப்புற மதிலுள் புகும்படி செய்தனர். அன்றிரவு, அரசன் போர் வீரர்கட்கும் பெருஞ்சோற்று விழாவோன்று செய்து அவர்களுடனிருந்து உண்டு, அவர்கட்கு உள்ளக் கிளர்ச்சியை உண்டு பண்ணினான். பின்பு வட நாட்டு வேந்தரை வெல்ல மேற்செல்லும் தன் கருத்தும் தோன்ற வஞ்சிமாலை முடியிலணிந்து மறுநாட் காலையிற் புறப்படச் சித்தமாயிருந்தனன்.

பொழுது புலர்ந்ததும் அரண்மனையில் மங்கல முரசம் முழங்கியது. அவ்வேளையே பயணத்திற்குக் குறித்த வேளையாதலால், செங்குட்டுவன், தன் குல தெய்வமாகிய சிவபெருமான் திருவடியை வலங் கொண்டு வணங்கி முடியிலணிந்து, பட்டவர்த்தனக் களிற்றின் மீதூர்ந்து, நால்வகைப்படையும் சூழப் புறப்பட்டுச் சென்று, நீலகிரியை அடைந்து, அங்கு அமைந்திருந்த பாடியில் தங்கி இளைப்பாறினன்.

இச்சமயத்தில், கொங்கணக் கூத்தரும், கருகாடகரும், குடகரும், ஓவரும் தத்தமக்குரிய அலங்காரங்களுடன் அரசன் முன் வந்து, ஆடல் பாடல்களைச் செய்து பரிசில் பெற்றுச் சென்றனர். பின்பு சஞ்சயன் முதலிய தன் தூதுவர்கள் பல்வகைத்திறைப்பொருள்களோடு வந்து வணங்கி, “அரசர் பிரானே, வட திசைச்செல்வது பத்தினிக்கடவுளின் உருவம்சமைத்தற்குரிய சிலையின்பொருட்டேயாயின், 'நாங்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/71&oldid=1410903" இலிருந்து மீள்விக்கப்பட்டது