கண் திறக்குமா?
கதையின் கதை
பணக்காரனாகட்டும் பரம தரித்திரனாகட்டும், படித்தவனாகட்டும் படியாதவனாகட்டும், இந்த உலகத்தில் உயிர் வாழ்ந்திருக்க வேண்டுமானால் பிறருடைய உதவியை ஏதாவது ஒருவிதத்தில் நாடத்தான் வேண்டியிருக்கிறது. அவ்வாறு நாடவில்லையானால் எமன் வந்து நம் வீட்டுக் கதவைத் தட்டுவதற்குப் பதிலாக நாமே சென்று அவன் வீட்டுக் கதவைத் தட்டும்படி ஆகிவிடுகிறது - தயவு தாட்சண்யமின்றிப் பொதுஜன சேவையில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தியாகிகள்கூட உண்மையில் மேற்கூறிய நிலையில் உள்ளவர்களே!
இல்லையென்றால் அவர்கள் ‘தியாகிகள்’ என்று வெறும் பெயராவது எடுத்திருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? - அதுதான் இல்லை. ஏனெனில், தினசரி வாழ்க்கையில் எத்தனையோ தியாகிகள் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதை நாம் பார்க்கிறோம். காரணம் என்னவென்று நீங்கள் ஆராய்ந்து பார்க்கும் போது - ஒன்று, அவர்கள் பணம் இல்லாதவர்களாயிருப்பார்கள்;