விந்தன்
113
அஞ்சிப் போனால் போகிறதென்று குடிசையைப் பிய்த்து எறிந்ததோடு விட்டால் அவர்கள் இப்படித்தான் வாலை ஆட்டிக் கொண்டிருப்பார்கள். உடனே அவர்களைக் கூண்டோடு கொண்டு போய்ப் போலீஸ் லாக் - அப்பில் அடைத்து விட்டால்தான் தொல்லை தீரும் - அவர்கள் மீதுள்ள குற்றங்களுக்கோ குறைவில்லை - விபசாரம் செய்த குற்றம்; சிசு ஹத்தி செய்ய முயன்ற குற்றம்: கெளரவமான ஒரு மனிதனை அவமதித்த குற்றம்...’
‘போதும். நிறுத்துங்கள்! - பணத்தால் சட்டத்தைக் கூட விலைக்கு வாங்கிவிடலாம் என்பதற்காக மனச்சாட்சியைக் கொன்றுவிடாதீர்கள்!”
‘உன்னுடைய உபதேசம் ஒன்றும் எனக்கு வேண்டாம்; இனிமேல் நான்'உன்னிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியதும் ஒன்றுமில்லை - வந்த வேலையைப்பார்!’ என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு அவர் எழுந்தார். எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. ‘இனி ஒரு நிமிஷங்கூட இங்கே நான் இருக்க விரும்பவில்லை. சித்ராவைக் கூப்பிடுங்கள்; அவளை அழைத்துக் கொண்டு உடனே நான் சென்னைக்குப் புறப்பட வேண்டும்’ என்றேன்.
‘அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறாய்? அவள் செத்துப்போயிருந்தால்கூடக் கவலை விட்டது என்று பேசாமல் இருந்திருக்கலாம் - பாவி, வேறுவிதமாக அல்லவா நடந்துகொண்டு விட்டாள்!’ என்று பாகாய் உருகினார் அவர்.
‘எவ்விதமாக நடந்துகொண்டு விட்டாள்? உங்களுடைய யோக்கியதைக்கு அவளுடைய யோக்கியதை என்ன குறைந்துவிட்டது?”
“எங்களுடைய யோக்கியதை கிடக்கட்டும், அப்பா! உன் தங்கையினுடைய யோக்கியதையைக் கேள்: