விந்தன்
159
மறுநாள் காலை வழக்கம்போல் நான் பத்திரிகை பார்த்துக் கொண்டிருந்தேன்; அதிலிருந்த செய்தி ஒன்று என்னைத் திடுக்கிட வைத்தது;
செய்யாமங்கலத்தில் கோரக்கொலை
தன்னை பலாத்காரம் செய்யவந்த பாதகனை ஒரு பெண் வெட்டி வீழ்த்தினாள்!
தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த செய்யாமங்கலத்தில் நேற்று இரவு தன்னைக் கற்பழிக்க வந்த ஒரு காதகனை வீராங்கனையொருத்தி வெட்டி வீழ்த்திவிட்டாளாம். இந்தப் படுகொலைக்கு உள்ளானவன் செய்யாமங்கலம் ஜமீனைச் சேர்ந்த சிவகுமாரன் என்பவன், செய்தி கேட்டு ஓடிவந்த போலீஸாரிடம் அந்தக் கற்புக்கரசி தன் குற்றத்தைத் தீரத்தோடு ஒப்புக்கொண்டாளாம். அவளுடைய துணிச்சலைப் பற்றி ஊரெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது. (ந.நி.) இதைப் படித்து முடித்ததும், "முந்திக்கொண்டு விட்டாள்; பாலுவை யாரோ ஒருத்தி முந்திக்கொண்டு விட்டாள்!" என்று நான் என்னையும் அறியாமல் கத்தினேன்.
"என்ன அண்ணா , என்ன விஷயம்?" என்று பரபரப்புடன் கேட்டாள் சித்ரா.
நான் விஷயத்தைச் சொன்னேன். "இப்பொழுது தான் எனக்கு நம்பிக்கை உதயமாகிறது!" என்றாள் அவள்.
"நம்பிக்கையா?"
"ஆமாம், தமிழ்நாட்டின் மேல் எனக்கு இப்பொழுது தான் நம்பிக்கை உதயமாகிறது!" என்றாள் அவள் அழுத்தந் திருத்தமாக.