விந்தன்
171
கல்யாண வியாபாரத்துக்கு வேண்டிய பேரமெல்லாம் ஒருவாறு பேசி முடிந்தபிறகு, "பெண்ணை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அத்துடன், நீங்கள் சொல்வதிலிருந்து அவள் புத்திசாலியாகவும் இருப்பாள் என்றுத் தெரிகிறது. ஆனால் பிள்ளையாண்டான் அவளுக்கு ஏற்றபடி இருக்கவேண்டுமே என்று தான் எங்களுக்குக் கவலையாயிருக்கிறது! என்றாள் கண்ணனின் தாயார்.
"ஆரம்பித்து விட்டாயா?" என்றார் அவள் கணவர்.
"அதனாலென்ன, சொல்ல வேண்டியதை நாம் சொல்லிவிடுவோம். அதற்குப் பின் அவன்பாடு; அவள் பாடு!" என்றாள் அவள்.
"ஏன், பிள்ளையாண்டானுக்கு என்ன?" என்று கேட்டார் பாரிஸ்டர் பரந்தாமன்.
"அவன் என்னமோ நல்லவன்தான்; கொஞ்ச நாட்களாக அவன் நடந்து கொள்ளும் முறைதான் எங்களுக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை!"
"ஏன், ஏதாவது தவறான வழியில்..."
"ஆமாம்; அது என்னவோ எங்களுக்குத் தவறான வழியாகத்தான் படுகிறது. ஆனால் அவனோ அதுதான் நல்ல வழி என்று சாதிக்கிறான்!"
"அது என்ன, அப்படிப்பட்ட வழி?"
"அதுதான் - காங்கிரஸ் காந்தின்னு கொஞ்ச நாட்களாக எங்கே பார்த்தாலும் அடிபட்டுக் கொண்டிருக்கிறதே, அந்த வழிதான்!"
"இதுதானா, சரியாய்ப்போச்சு; நாங்கள் என்னமோ ஏதோ என்று பயந்தே போய்விட்டோம் - ஏன், அது நல்ல வழிதானே?" என்றேன் நான்.
"நல்ல வழியுமாச்சு, கெட்ட வழியுமாச்சு! யாராவது தான் சாக மருந்து தின்பார்களா? - காங்கிரஸ் கீங்கிரஸ்