180
கண் திறக்குமா?
"சரியாய்ப் போச்சு; இங்கேயும் வந்துவிட்டீர்களா?" என்றேன் நான்.
அதைப் பொருட்படுத்தாமல், "என்ன இருந்தாலும் நீர் இப்படிச் செய்திருக்கக்கூடாது!" என்றார் அவர்.
"என்ன செய்திருக்கக் கூடாது என்கிறீர்கள்?"
"வேறொன்றுமில்லை; எங்கள் வீட்டுக்கு வராமல் இருந்திருக்கக் கூடாது என்கிறேன்!"
"என்னால் உங்களுக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்பட்டுவிடக் கூடாதல்லவா? அதனால்தான் வரவில்லை!"
"சிரமம் என்ன சிரமம்! நீர் ஒரு விதத்தில் எனக்குச் சிரமம் கொடுத்தால், இன்னொரு விதத்தில் நான் உமக்குச் சிரமம் கொடுத்துவிட்டுப் போகிறேன். ஆனால் ஒன்று; ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் சிரமம் உபயோகமுள்ளதாயிருக்கவேண்டும் - அவ்வளவுதான் லிஷயம்!"
"அதாவது, முடிந்தவரை ஒருவரையொருவர் உபயோகித்துக் கொண்டு காரியவாதிகளாக வாழவேண்டும். அப்படித்தானே?"
"பேஷ்! இவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய 'உலக மகா தத்துவ'த்தை நீர் எப்படியோ புரிந்து கொண்டுவிட்டீரே?"
"இத்தனை நாட்களாக உங்களுடன் பழகும் நான் இதைக்கூடப் புரிந்து கொள்ள முடியாதா, என்ன?"
"ரொம்ப சந்தோஷம், இம்மாதிரி விஷயங்களில் உண்மையை ஒப்புக் கொள்பவர்கள் உலகிலேயே ஒரு சிலர்தான் இருக்கமுடியும். அவர்களில் ஒருவனே நான் என்பதை நீர் இப்பொழுதாவது உணர்ந்தீரே, அதுவே போதும் எனக்கு!"