பக்கம்:கண் திறக்குமா.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

189

"ஆமாம். 'சுயராஜ்யம், சுயராஜ்யம்' என்று நாம் அடித்துக்கொள்கிறோமே, அந்த விஷயத்தில்கூட அவளுடைய அபிப்பிராயம் மாறுபடுகிறது. 'சுயராஜ்யம்' வெறும் அதிகார மாற்றமாய்த்தான் இருக்கும் என்று அவள் நினைக்கிறாள். ஒடுக்கப்பட்ட - ஏன், ஒதுக்கப்பட்ட மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்று விரும்புபவன் சட்டத்தை மீறவேண்டுமென்ற அவசியம் இல்லை; மீறாமலே தொண்டு செய்யலாம். புரட்சி சட்டத்தில் வேண்டியதில்லை; மனத்தில் தான் வேண்டும் என்பது அவள் கட்சி. அந்தக் கட்சியில் இப்போது அவள் கணவனான கண்ணனும் சேர்ந்துகொண்டு விட்டான்; சேர்க்கப்பட்டு விட்டான்!" என்றார் பரந்தாமனார்.

அதைக் கேட்டதும், "அப்பா, அப்பா! நானும் ஒரு மாத காலம் சித்ராவுடன் போய் இருந்துட்டு வரட்டுமா, அப்பா?" என்றாள் சாந்தினி.

"கட்டாயம் போ, அம்மா! நீ அவசியம் அவளைப் பார்க்க வேண்டும் அவளிடம் நீ தெரிந்து கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது!" என்றார் அவர்.

"தெரிந்து கொள்ளுங்கள்; யார், யாரிடம் என்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ, தெரிந்து கொள்ளுங்கள்!" என்றேன் நான்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/192&oldid=1379607" இலிருந்து மீள்விக்கப்பட்டது