20
கண் திறக்குமா?
கொண்டே கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு பாரிஸ்டர் பரந்தாமன் வீட்டுக்குக் கிளம்பினேன், நான்.
“ரொம்ப அழகுதான்!” என்று தாயார் சொன்னது, மாடிப்படிகளில் இறங்கிக்கொண்டிருந்த என் காதில் விழுந்தது.
✽✽✽
என்றுமில்லாத திருநாளாய் அன்று பாரிஸ்டர் பரந்தாமன் ஒரே உற்சாகமாயிருந்தார். அவருடைய உற்சாகத்துக்குக் காரணம் என்னவென்று விளங்காமல் நான் தயக்கத்துடன் அவரை நெருங்கினேன். என்னைக் கண்டதும் “வா, தம்பி, வா! உனக்குச் சமாசாரம் தெரியுமா?” என்று ஆரம்பித்தார் அவர்.
“என்ன சமாசாரம்?” என்றேன் நான், ஒன்றும் புரியாமல்,
“எல்லாம் நல்ல சமாசாரந்தான்! இன்று அந்த கலகக்காரனைப் பிடித்துச் சிறையில் போட்டுவிட்டார்களாம்!”
“எந்தக் கலகக்காரனை...?”
“அவன்தான், மிஸ்டர் காந்தி! ரெளலட் சட்டத்தை எதிர்த்துச் சத்தியாக்கிரகமோ, சண்டித்தனமோ செய்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே கவிழ்த்துவிடப் போகிறேன் என்றானே, அவனை! - அந்தப் பைத்தியக்காரனின் பேச்சையும் பாழாய்ப்போன ஜனங்கள் கேட்டுத் தொலைக்கிறார்களே, அதுதான் எனக்கு வேடிக்கையாயிருக்கிறது. இந்த நாட்டை ஆள வெள்ளைக்காரன் மட்டும் வந்திராவிட்டால் இவர்கள் அவரவர்களுடைய பெண்டாட்டியையாவது காப்பாற்றிக் கொண்டிருக்க முடியுமா? - இல்லை, கேட்கிறேன்.”