விந்தன்
27
கொள்வார். - வந்தவர்கள் அத்தனை பேரும் ஏமாந்து திரும்புவார்கள்.!
ஒருமுறை இருமுறையல்ல, இப்படி எத்தனையோ முறை - இதைப்பற்றிப் பின்னால் விசாரித்தபோது, அந்த ஒரு சிலர் பெரும் பணக்காரர்களாகவும், பெரிய பெரிய மில் முதலாளிகளாகவும், 'கிருஷ்ண லீலை'யின் காரணமாக ஆஸ்பத்திரிக்கு வந்தவர்களாகவும் இருந்தார்கள்.
பணம் நுழையாத இடமோ, அதனால் சாதிக்க முடியாத காரியமோ உலகில் என்னதான் இருக்கிறது?
இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்த போது, ‘என்ன, மிஸ்டர் செல்வம்’ என்று ஒரு பழகிய குரல் - ஏற்கெனவே பரிச்சயமான குரல் - என் காதில் விழுந்தது; திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். கையில் பத்திரிகையுடன் என் பள்ளிக்கூடத்து நண்பனான பாலு நின்றுகொண்டிருந்தான்.
நின்றவன் சும்மா நிற்கவில்லை; என் கட்டிலை ஆதாரமாகப் பிடித்துக்கொண்டு நின்றான் - அவன் தலையிலும் காலிலும் கூடப் பலமான அடி!
‘'என்ன பாலு, நீயும்...'’
“ஆமாம், உனக்கு எதிர்த்தாற்போல் தான் நானும் இத்தனை நேரம் படுத்துக்கொண்டிருந்தேன்!”
“அப்படியா? நான் பார்க்கவேயில்லையே!”
'‘எப்படிப் பார்க்கமுடியும்? இன்றுதானே நீ இந்த உலகத்துக்கு வந்திருக்கிறாய்?’’
‘'ஒஹோ! அதற்குள் நீ படுக்கையை விட்டு எழுந்து விட்டாயே? டாக்டர்கள் பார்த்தால்...’'
'‘ம்... நம்மையெல்லாம் பார்க்க அவர்களுக்கு எங்கே நேரமிருக்கிறது? நீ இந்தப் பத்திரிகையைப் பார்த்தாயா?”
“என்ன விசேஷம்?