பக்கம்:கண் திறக்குமா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

33

“மதிப்பும் மரியாதையும், அவற்றால் ஏற்படும் பெயரும் புகழும் எனக்கென்னத்துக்கு, சித்ரா? யார் ஒருவன் அவற்றையெல்லாம் விரும்பாமல் இருக்கிறானோ, அவன்தான் உண்மையான தேசத்தொண்டனாயிருக்க முடியும்” என்றேன் நான்.

“இருக்கலாம், அண்ணா! ஆனால் அவனால் யாருக்கு என்ன பிரயோசனம்? அவனுக்கும் பிரயோசனமில்லை; அவன் குடும்பத்துக்கும் பிரயோசனமில்லை; மக்களுக்காவது அவனால் ஏதாவது பிரயோசனம் உண்டா, என்றால் அதுவும் கிடையாது. அவன் என்னவோ அவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று நினைக்கலாம்; ஆனால் முடியாது. அவ்னுக்குத்தான் மக்கள் ஏதாவது உதவி செய்யவேண்டியிருக்கும். இந்த நிலையில் அவன் தொண்டனாயிருப்பதைவிட, இல்லாமல் இருப்பதே மேலல்லவா?”

“இதென்ன அதிகப்பிரசங்கித் தனம்? வர வர நீ ரொம்பப் பொல்லாதவளாகப் போய்விட்டாயே!”

“நான் ஒன்றும் பொல்லாதவளாகப் போகவில்லை; உலகம் அவ்வளவு பொல்லாத உலகமாகப் போய் விட்டது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஜனநாயக நாடுகளைத்தான் பாருங்களேன். அங்கெல்லாம் உண்மையிலேயே மக்களின் ஆட்சியா நடக்கிறது? பணக்காரர்களின் ஆட்சிதான் நடக்கிறது; பட்டம் பதவி பெற்றவர்களின் ஆட்சிதான் நடக்கிறது; ராஜதந்திரம் என்று சொல்லிக் கொண்டு மறந்தும் உண்மை பேசாத பொய்யர்களின் ஆட்சிதான் நடக்கிறது; பொதுஜனத் துரோகிகளின், சுயநலப் புலிகளின், பணப் பேய்களின் ஆட்சிதான் நடக்கிறது. ஏழைகளின் விமோசனம் வெறும் எழுத்தளவில், பேச்சளவில்தான் இன்னும் அங்கெல்லாம் இருந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா, என்ன?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/36&oldid=1379170" இலிருந்து மீள்விக்கப்பட்டது