விந்தன்
33
“மதிப்பும் மரியாதையும், அவற்றால் ஏற்படும் பெயரும் புகழும் எனக்கென்னத்துக்கு, சித்ரா? யார் ஒருவன் அவற்றையெல்லாம் விரும்பாமல் இருக்கிறானோ, அவன்தான் உண்மையான தேசத்தொண்டனாயிருக்க முடியும்” என்றேன் நான்.
“இருக்கலாம், அண்ணா! ஆனால் அவனால் யாருக்கு என்ன பிரயோசனம்? அவனுக்கும் பிரயோசனமில்லை; அவன் குடும்பத்துக்கும் பிரயோசனமில்லை; மக்களுக்காவது அவனால் ஏதாவது பிரயோசனம் உண்டா, என்றால் அதுவும் கிடையாது. அவன் என்னவோ அவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று நினைக்கலாம்; ஆனால் முடியாது. அவ்னுக்குத்தான் மக்கள் ஏதாவது உதவி செய்யவேண்டியிருக்கும். இந்த நிலையில் அவன் தொண்டனாயிருப்பதைவிட, இல்லாமல் இருப்பதே மேலல்லவா?”
“இதென்ன அதிகப்பிரசங்கித் தனம்? வர வர நீ ரொம்பப் பொல்லாதவளாகப் போய்விட்டாயே!”
“நான் ஒன்றும் பொல்லாதவளாகப் போகவில்லை; உலகம் அவ்வளவு பொல்லாத உலகமாகப் போய் விட்டது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஜனநாயக நாடுகளைத்தான் பாருங்களேன். அங்கெல்லாம் உண்மையிலேயே மக்களின் ஆட்சியா நடக்கிறது? பணக்காரர்களின் ஆட்சிதான் நடக்கிறது; பட்டம் பதவி பெற்றவர்களின் ஆட்சிதான் நடக்கிறது; ராஜதந்திரம் என்று சொல்லிக் கொண்டு மறந்தும் உண்மை பேசாத பொய்யர்களின் ஆட்சிதான் நடக்கிறது; பொதுஜனத் துரோகிகளின், சுயநலப் புலிகளின், பணப் பேய்களின் ஆட்சிதான் நடக்கிறது. ஏழைகளின் விமோசனம் வெறும் எழுத்தளவில், பேச்சளவில்தான் இன்னும் அங்கெல்லாம் இருந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா, என்ன?”