பக்கம்:கண் திறக்குமா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

கண் திறக்குமா?

காணோம்?” என்று கேட்டார் பரந்தாமன்.

“வந்திருந்தேனே, உங்களைத்தான் காணவில்லை!” என்றேன் நான்.

“எப்போது வந்திருந்தாய்?”

“காலையில்தான் வந்திருந்தேன்; வாசலில் நின்று கொண்டிருந்த உங்கள் பெண்ணைக் கூடப் பார்த்தேன்...”

“நிஜமாகவா! நான் அவளைக் கல்லூரிக்கு அனுப்பி விட்டுத்தானே வெளியே போனேன்?”

“மூத்த பெண்ணைப் பார்க்கவில்லை; இளைய பெண்ணைப் பார்த்தேன்!”

இதைக் கேட்டதும் பரந்தாமனாரின் முகத்தில் ஏனோ அசடு வழிந்தது. அவர் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவியாய்த் தவித்தார்.

எனக்குத் தர்ம சங்கடமாகப் போய்விட்டது. “என்ன, உங்களிடம் ஒன்றும் சொல்லவில்லையா?” என்று சம்பந்தமில்லாமல் கேட்டு வைத்தேன்.

பாவம், அவர் தம் எண் சாண் உடம்பையும் ஒருசாணாகக் குறுக்கிக்கொண்டு, “அவள்... அவள்...” என்று இழுத்தார்.

நான் ஏதோ ஒரு பெரிய ஆபத்தில் சிக்கிக்கொண்டவனைப் போல அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“... அவள் என்... அவள் என் இளைய பெண் இல்லை... இ...ளை... யாள்...!” என்று ஒருவாறு அவர் கூறி முடித்தார்.

“அப்பாடி!” என்று நான் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/43&oldid=1379042" இலிருந்து மீள்விக்கப்பட்டது