பக்கம்:கண் திறக்குமா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

49


அடிமை நாட்டு விடுதலையில் எனக்கு ஆர்வம் இருந்தாலும், அதில் வாழும் நாற்பது கோடி மக்களும் நல்வாழ்வு பெறவேண்டுமென்பதில் எனக்கு அக்கறை இருந்தாலும், அதற்காக என்னை ஈன்ற தாயையும், உடன் பிறந்த தங்கையையும், நடுவில் வந்து என் இதயத்தில் இடம் பெற்றுவிட்ட அந்த இன்முகத்தையும் என்னால் அறவே மறந்துவிட முடியவில்லை.

ஆனால் அவர்களுக்காக முன்னால் வைத்த காலைப் பின்னால் வைக்கவில்லை நான்; சென்றே விட்டேன் சிறைக்கு!

அங்கே எத்தனையோ விதவிதமான கைதிகளை என்னால் பார்க்க முடிந்தது. பேரும் புகழும் பெறுவதற்காக வேறு வழியின்றிச் சிறைக்கு வந்தவர்கள்; சிறைக்குள் இருந்தாலும் சொந்த பண பலத்தைக் கொண்டு சுக வாழ்வு வாழமுடியும் என்ற நம்பிக்கையுடன் வந்தவர்கள்; தங்கள் சொந்த நலனை உத்தேசித்துப் பிறரால் கழுத்தைப் பிடித்து உள்ளே தள்ளப்பட்டவர்கள்; தேர்தலின் போது வோட்டர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக வந்தவர்கள்; தாங்கள் அதுவரை செய்து வந்த அயோக்கியத்தனங்கள் அத்தனையும் மறைந்து போவதற்காக வந்தவர்கள்; சிறை சென்ற தேசத் தொண்டர் என்ற நற்சாட்சி பெறுவதற்காக வந்தவர்கள்; மத்தியில், சர்க்காருக்கும், காங்கிரசுக்குமிடையே ஏதாவது சமரசம் ஏற்பட்டு, அதன் பயனாகச் சீக்கிரமே விடுதலையடைந்து விடலாம் என்ற சபலத்துடன் வந்தவர்கள் - இவர்களுக்கு மத்தியிலே உண்மையாகத் தேச விடுதலையில் ஆர்வங்கொண்டு வந்திருந்த சில அப்பாவிகளும் அங்கங்கே இருக்கத்தான் செய்தார்கள்!

அவர்களில் யாரையும் எனக்கு முதலில் தெரிய வில்லை; என்னையும் அவர்களில் யாருக்கும் தெரிய வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/52&oldid=1379114" இலிருந்து மீள்விக்கப்பட்டது