பக்கம்:கண் திறக்குமா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கண் திறக்குமா?


ஆஸ்பத்திரியில் சந்தித்த பாலுவையாவது அங்கே பார்க்க முடியுமென்று நான் எண்ணியிருந்தேன்; அவனையும் காணவில்லை.

எனவே தன்னந்தனியாகச் சிறைக்குள் நுழைந்த நான் கடைசிவரை தன்னந்தனியாகவே இருக்க நேரிடுமோ என்ற அச்சம் என்னைப் பிடுங்கித் தின்றது. ஆனால், அடுத்த நிமிஷமே அந்த அச்சத்திற்கு அர்த்தமில்லாமற் போய்விட்டது. காரணம், அதற்குள் எத்தனையோ பேர் வலுவில் வந்து என்னை அறிமுகம் செய்து கொண்டது தான்!

அதுமட்டுமல்ல; என்னதான் தலைகீழாக நின்றாலும் சிறைக்கு வெளியே அறிந்துகொள்ள முடியாத ஒருவருடைய மனோபாவத்தைச் சிறைக்குள்ளே வெகு எளிதில் அறிந்து கொள்ள முடிந்தது. அவரவர்களுடைய அந்தரங்க நோக்கங்கள், ஆசாபாசங்கள் எல்லாம் சிறை வாசத்தின் போது உள்ளது உள்ளபடியே வெளிப்பட்டன. அவற்றையெல்லாம் கேட்டபோது எனக்கு ஒரு பக்கம் அதிசயமாகவும், இன்னொருபக்கம் ஆச்சரியமாகவும் இருந்தது, ஏனெனில், சிறைக்கு வெளியே இருந்தபோது தேச பக்தர்கள் அனைவரையும் தெய்வப் பிறவிகள் என்று நானும் உங்களைப்போல் எண்ணிக்கொண்டிருந்தேன்!

ஒருநாள் ஒரு தேசபக்தருக்கு விபரீதமான சந்தேகம் ஒன்று ஏற்பட்டுவிட்டது. “ஏன் ஸார், இப்படி அடிக்கடி ஏதாவது ரகளை செய்து நாம் சிறைக்கு வருவதால் சுயராஜ்யம் வந்துவிடுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா!”

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. “ஏன், நீங்கள் அப்படி நினைத்துத் தானே சிறைக்கு வந்திருக்கிறீர்கள்?” என்றேன்.

“அதெல்லாம் வேறு விஷயம் - இந்த விஷயத்தில் உங்கள் அபிப்பிராயம் எப்படி?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/53&oldid=1379120" இலிருந்து மீள்விக்கப்பட்டது