66
கண் திறக்குமா?
வையுங்கோ, சாத்தி வையுங்கோன்னு ஆயிரந் தரம் முட்டிண்டாச்சு; யாராவது கேட்டாத்தானே? இப்போ வழியோட போற தடியன்களெல்லாம் இங்கே வந்து சித்த நின்னு, என்னத்தையோ முறைச்சு முறைச்சுப் பார்த்துத் தொலையறான்கள்!' என்று இரைந்துகொண்டே கதவைத் 'தடா'லென்று சாத்திவிட்டுச் சென்றாள்.
அவ்வளவுதான்; இனி இங்கு நிற்பதில் பிரயோசனமில்லை என்று நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
ஆனால், 'வேறு எங்கே செல்வது?' என்றுதான் எனக்குப் புரியவில்லை!
அந்த நகரிலேயே பிறந்து வளர்ந்தவனென்றாலும் எனக்கு அங்கே யாருடனும் அவ்வளவாகப் பழக்கம் கிடையாது. மேலும் சிறு வயதில் மிகவும் செல்வமாக வளர்க்கப்பட்டவனாதலால், எனக்கு யாருடனும் பழக வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. இதனால் நான்கு பேருடன் சேர்ந்து நன்மையோ, தீமையோ அடையும் பாக்கியமோ, அல்லது துர்ப்பாக்கியமோ எனக்கு அன்றுவரை கிட்டாமலே போய்விட்டது. இந்த அழகில் வளர்ந்ததற்கு நானே முழுவதும் பொறுப்பாளி என்றும் சொல்லிவிடுவதற்கில்லை; எனக்கு உலகம் இன்னதென்று தெரியும்வரை என்னை ஒரு பொம்மையாகவே பாவித்து வந்த என் பெற்றோரும் ஓரளவு பொறுப்பாளிகள்தாம்!
பாலுவோடுகூட நான் பள்ளிக்கூடத்தில் பழகியதோடு சரி - அவன் எங்கே இருக்கிறான், யாருடன் இருக்கிறான் என்பன போன்ற விவரங்கள் ஒன்றும் இன்று வரை தெரியாது - அப்படியே தெரிந்தாலும் இப்போது என்ன பயன்? - அவன் வெளியே இருக்கிறானோ, உள்ளே இருக்கிறானோ?
பாரிஸ்டர் பரந்தாமன் வீட்டுக்குப் போகலாம்; அப்படியே சாந்தினியையும் பார்க்கலாம். ஆனால்,