84
கண் திறக்குமா?
இப்படியாக என்னவெல்லாமோ எண்ணியெண்ணி நான் ஏங்கிக்கொண்டிருந்தபோது, ‘கிலிங், கிலிங்’ என்ற வளையலொலி என் காதில் விழுந்தது; திரும்பிப் பார்த்தேன் - சாளரத்தின் வழியாக ஒரு கடிதம் வந்து என் அறைக்குள் விழுந்தது; வியப்புடன் அதை எடுத்துப் பிரித்துப்படித்தேன்:
அன்புடையீர்,
நாளை மாலை நாலு மணிக்கு என்னை ஜெனரல் ஆஸ்பத்திரி வாயிலண்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவும். அதற்கு முன்னரே அவசியமானால் ‘தஞ்சைக்குச் சென்று வருகிறேன்’ என்று என் தகப்பனாரிடம் விடை பெற்றுக் கொள்ளவும் - மற்றவை நேரில்.
சாந்தினி.
இந்தக் கடிதத்தைப் படித்ததும் எனக்கு அப்போது ஏற்பட்ட உள்ளக் கிளர்ச்சியை நான் எப்படி எழுத்தில் விவரிப்பேன்?
8. காதலும் கண்ணீரும்
மறுநாள் பொழுது விடிந்ததும் யாரோ வந்து என் அறைக் கதவுகளைத் திறக்கும் சத்தம் கேட்டது. ஜெயில் வார்டர்தான் வந்து விட்டானோ என்று நான் தூக்கி வாரிப்போட்டவனாய் எழுந்து உட்கார்ந்தேன். “மூன்று வருஷத்துத் தூக்கத்தையும் சேர்ந்து ஒரே இரவில் தூங்கி விடுவதாக உத்தேசமோ?” என்று கேட்டுக்கொண்டே பாரிஸ்டர் பரந்தாமன் உள்ளே நுழைந்தார்.