பூவை எஸ். ஆறுமுகம் ❖ 115
கெடுத்த அந்தப் பாவியை அந்த ரெளடியை அந்த ஸ்கவுண்ட்ரலை எப்படிக் கண்டுபிடிப்பது...’ அவனுடைய பற்கள் கூடி விலகிய அரவம் கேட்ட மாத்திரத்தில், அவனை நிமிர்ந்து உற்றுப் பார்க்கலானான் பூமிநாதன்.
அம்பலத்தரசனின் விழிக்கரைகளில் சினத்தீ ரத்தம் கட்டியிருந்தது.
“அம்பலத்தரசன், உங்க மூஞ்சி திடுதிப்பென்று ஏன் இப்படி ஆத்திரம் கக்குகிறது?...” என்று கேட்டான் பூமிநாதன். அவன் பார்வையில் பூப்பொட்டணம் இப்போது தென்பட்டது.
“ஒன்றுமில்லை. ஒரு துரோகியைப் பற்றி நெனைச்சேன். வேறொன்றுமில்லை!”
“யார் அந்தத் துரோகி? சொல்லுங்க! அவனை நான் கவனிச்சுக்கிறேன். சட்டத்தின் பிடியிலே அகப்படாதவன் இந்த உலகத்திலே அப்படி யார் இருக்கமுடியும்?”
“அப்படியா?”
“சொல்கிறேன். அத்யந்த நண்பரான உங்க கிட்டே கூடிய விரைவிலே சொல்லிவிடுகிறேன், அந்தத் துரோகியைப் பற்றி!”
“நல்லதுங்க. கெட்டவர்களை நாம் மன்னிச்சு அவர்களை ஒரு போதும் இந்த மண்ணிலே விட்டு வைக்கப்படாதுங்க!” என்று தீர்மானத் தொனி கூட்டிச் சொன்னான் பூமிநாதன்!
“ஆமாம்!” என்று ஆமோதித்தான் அம்பலத்தரசன். அவன் நெற்றித் திட்டில் சிந்தனை ஓடிக் கிடந்தது. “என் ரெவ்யூவைப் பற்றி ஒண்ணுமே சொல்லலையே?” என்று பேச்சின் போக்குக்குப் புது ‘வடிகால்’ அமைத்தான் அவன்.
“பார்த்தீங்களா, மறந்துவிட்டேன். எனக்கு ஏதோதோ ஞாபகம்! உங்க விமர்சனம் ரொம்பவும் சரியாக இருந்திச்சு! உங்க விமர்சனம் மூலம் என் நடிப்புக்கு ஒரு மவுஸ்