பக்கம்:கதாநாயகி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128❖கதாநாயகி


பூமிநாதன் கையெடுத்து மீனாட்சி அம்மாளைக் கும்பிட்டான்.

"இவங்க என் தாயார்!"

"புரிஞ்சுக்கிட்டேன!" கொட்டாவி பிரிந்தது, முகக்களையும் பிரிந்தது.

இலைகளில் தண்ணிர் தெளித்துப் போட்டாள் மீனாட்சி அம்மாள். குனிந்து நிமிர்வதற்குள் மூச்சு வாங்கியது.

சாதம், கறிவகைகளைப் பரிமாறினாள் ஊர்வசி. கழுத்துச் சங்கிலியின் பதக்கம் தரையை இலக்குவைத்து ஊசலாடிக் கொண்டிருந்தது.

அப்போது, பூமிநாதனின் கவனம் ஒரு பழைய செய்தித்தாளில் இருந்தது.

அம்பலத்தரசன் பார்வையைச் செலுத்திய நேரத்தில், ஊர்வசியின் கவர்சி கனிந்த மார்பகத்தில் தெரிந்த அந்த ரத்தத் தழும்பு தென்பட்டது. 'என் ஊர்வசியை இந்தக் கதிக்கு உள்ளாக்கின அந்தப் பாவியார்? இளையபிரானே, குற்றம் செய்த துரோகியை எப்போது காட்டப்போகிறாய் நீ?...' அவன் கண்கள் கசிந்தன. மனக்கசிவு விழிகளைத் தஞ்சம் அடைந்ததோ?

ஊர்வசி நிமிர்ந்தாள். தண்ணீர்ச் செம்பை எடுத்து முதலில் பூமிநாதனிடம் கொடுத்தாள். சுயப்பரக்ஞை இழந்திருந்தவன் போல் எழுந்து கால்கள் சிக்கித் தடுமாற்றத்தோடு நின்ற பூமிநாதன், அந்தச் செம்பைப் பற்றிய போது, அவள் கைவிரல்களையும் பற்றி, அந்தப் பற்றுதலில் சிலிர்த்துக் கைவிரல்கள் நடுநடுங்க, கடைசியில் கைச் செம்பு கை நழுவியது. நழுவிய துடிப்புடன் அவன் விலகினான்; திருதிருவென்று விழித்தான்; நெஞ்சைப் பிடித்துக்கொண்டான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/138&oldid=1307644" இலிருந்து மீள்விக்கப்பட்டது