6 ❖ கதாநாயகி
இமை வரம்புகளில் ஈரம் தட்டியது கசிந்தது; வழிந்தது.
அவளைப் பார்க்கப் பார்க்க, அம்பலத்தரசனுக்கு வியப்பு ஒரு பக்கம் ஏற்பட்டது; வேதனை மறுபுறம் உண்டானது. "இப்போது நான் உங்களுக்காக என்ன செய்யவேனும், ஊர்வசி?" என்று பாசத்தோடு வினவினான். அவள் தன்னிடம் எதிர்பார்த்து வந்த உரிமையின் இனம் விளங்காத உரிமையின் உறவு பிரதிபலிக்கும் வகையில் அவன் பேச்சு அனுசரணை காட்டத் தவறவில்லை.
ஊர்வசி நளினமாகச் சிரித்த வண்ணம் அவனை ஆழ்ந்து நோக்கினாள்.
அந்தச் சிரிப்பின் நளினம் அவனுக்கு மேடை நாயகி ஊர்வசியின் ஒயில் நகையை நினைவூட்டியது. ஓர் அரைக்கணம் அவன் தன்னை மறக்க வேண்டியவன் ஆனான்.
சிரிப்பு அலையலையாக விரியத் தொடங்கியது.
அவன் தன்னுணர்வு எய்தினான்.
“மிஸ்டர் அம்பலத்தரசன்!.... நீங்க இன்னைக்கு ராத்திரி நடந்த நாடகத்துக்கு வந்திருந்தீங்க!.... மேடை நாடகத்தில் நான் கற்பழிக்கப்பட்டபோது, அந்தத் துன்பம் தாளாமல், அம்பிகையைச் சரண் புகுந்தேன். பிற்பாடு, நான் தற்கொலை செஞ்சுக்கிட எண்ணி கடலைத் தஞ்சம் அடைஞ்சேன்!.... ஆனால், இப்போது கற்பழிக்கப்பட்ட அபாக்கியவதியாக நான் உங்க முன்னே நிற்கிறேன்! எனக்குத் தஞ்சம் தர அலையெறிகடல் இப்போதும் ரெடியாகக் காத்துக்கிட்டு இருக்குது!... ஆனா, எனக்கு ஆபத்துக்குக் கைகொடுக்க அப்போது முன்வராத அதே தெய்வம், இப்போதும் முன்வரவில்லை! இப்போதுள்ள நிலையிலே, எனக்கு நானேதான் நிழலாக ஆகவேணும்! எனக்கு நானே காப்பாக