பக்கம்:கதாநாயகி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம் ❖ 23


கொண்டு எடுத்தாள். “இருங்க. நான் தடவித் தேய்த்து விடுகிறேன், என்னால் உண்டான தலைவலியை நான்தானுங்க தீர்க்க முடியும்! இந்தப் பாவியாலேதான் உங்களுக்கு எத்தனை பெரிய சோதனை முளைச்சிருக்குது!....” என்றாள்.

அன்பின் நெருக்கத்தோடு அவளைப் பார்த்த அவன் கண்கள் கண்ணீரில் மிதந்தன.

தலைவலிக் களிம்பைத் தடவினாள் அவள். “அழறீங்களா நீங்களும்? நான் அழுதது போதாதுங்களா?” என்று கேட்டு விட்டு, அவளும் அழுதாள்.

அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான் அவன்.

அவனுடைய கைகள் நிதானமாகச் செயற்பட்டன.

அந்தக் கைகளை எடுத்துத் தன் கண்களில் பக்தியோடு ஒற்றிக் கொண்டாள் ஊர்வசி. வளைகள் குலுங்கின.

“நீ பாவியல்ல இனிமேல்!..... இனிமேல் நீ பாக்கியவதி, ஊர்வசி!...” உத்தாரணம் ஆனது அவன் வாய்மொழிவாய்மை மொழி!

அவள் மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தாள். “ஆஹா!....”

“நேரம் ஆகிடுச்சு. விடிஞ்சதும், மிச்சப் பேச்சை வச்சுக்கலாம். நீ இங்கே தூங்கு. நான் வெளியிலே படுத்துக்கிறேன்!” என்று அறிவித்தான் அம்பலத்தரசன்.

“உங்களை நம்பியிருக்கிறவள் நான், நீங்களும் இங்கேயே படுத்துக் கொள்ளுங்கள்!..... நம் இருவர் மனமும் நமக்குக் காவல் புரியட்டும்!....”

அண்ணல் மகாத்மா அருட் புன்னகை சிந்திக்கொண்டிருந்தார்....

ஒளி அணைந்தது. அறையின் கதவுகள் திறந்தே கிடந்தன!....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/33&oldid=1323571" இலிருந்து மீள்விக்கப்பட்டது