பக்கம்:கதாநாயகி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 ❖ கதாநாயகி


'சமுதாயப் பிரக்ஞை' அவன் கண்களிலே ஆலவட்டம் சுற்றியிருக்கவேண்டும்.

குறுக்கு மறித்துப் பறந்த சைக்கிள் ஒன்று அவன் பேரில் மோதியது. அவனுக்குச் சுய நினைவை ஊட்டத்தான் அப்படி மோதியதோ? அவன் சுயஞாபகம் பெற்ற உண்மையை அறிந்ததும், சைக்கிள்காரன் 'கடலே கதி' என்று மீண்டும் பறந்துவிட்டான்.

வேஷ்டியைத் தட்டிவிட்டவனாக அங்கிருந்து புறப்படத் தயாரானான் அம்பலத்தரசன், பட்டணம் விழித்துக் கொண்ட பின், அவன் தூங்கிக்கொண்டு இனிமேலும் அங்கே நின்று கொண்டிருக்க முடியுமா?

அவன் புறப்பட்டான்.

புறப்பட்டவனின் முன்னே 'டாட்ஜ்' எதிர்பட்டது. பூமிநாதன் உள்ளே இருந்தான். கார் ஆடி அசைந்து நிற்க முனைந்தது. "ஸார், ஊர்வசியை ராத்திரியிலேயிேருந்து காணலையாம்; அவங்க அம்மா சொன்னாங்க!.... பாவம்!" என்று தெரிவித்தான் பூமிநாதன்.

அவனது குரலின் துயரம் அம்பலத்தரசனின் நெஞ்சத்தைத் தொட்டது. 'அட, பாவமே!’ என்று மேலும் விளக்கம் கொடுத்தான் சீமான் பெற்ற செல்வம்.

நண்பனிடம் நடப்பைச் சொல்லிவிட்டால் என்னவென்று துடித்தான் அம்பலத்தரசன். ஆனால், அச்செயல் அவ்வளவு விவேகமாகப்படவில்லை. ஆகவே, கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டியவன் ஆனான் அவன்.

பூமிநாதனின் கார் சீனத்துக் கடை வீதியை இலக்கு வைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/40&oldid=1310089" இலிருந்து மீள்விக்கப்பட்டது