(5)
"குட்மார்னிங், அத்தான்!” என்ற காலை நல் வணக்கம் சொல்லி, ஒயில் காத்துச் சிரித்தாள், ஊர்வசி.
"குட்மார்னிங், குட்மார்னிங்” என்று பதில் வணக்கம் சொல்லி, அழகு காட்டிச் சிரித்தான் அம்பலத்தரசன்.
அவள் முகம் அழகு கனிந்த நிம்மதியோடு விளங்கியது. புட்டாமாவுத் துகள்கள் அவளது கன்னக் கதுப்புகளில் கொஞ்சம் கூடுதலாகவே காணப்பட்டன. அவளது நளினம் மிகுந்த நேத்திரங்களில் புதிய அமைதி இழைந்தது. அக்கண்களிலேதான் எத்துணை கவர்ச்சி!
“ராத்திரி நீங்க நிம்மதியாய்த் தூங்கலே போலே!” என்று மெல்லிய குரலில் கேட்டாள் ஊர்வசி.
இரவு பூராவும் நிம்மதி இழந்து தவித்துப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்ததை அவன் எண்ணிப்பார்த்தான். இரவு பன்னிரண்டரை மணியிலிருந்து விடிகாலை நான்கு மணிமட்டும் அவன் தூக்கம் பிடிக்காமல் தவித்த தவிப்பை அவன்தான் அறிவான். இப்போது அத் தவிப்பை அவளும் அறிந்திருந்தாளோ?
"நான் நிம்மதியாய்த்தான் தூங்கினேன். நீங்க... நீ நல்லாத்தூங்கினே, இல்லையா?"
"நான் நல்லாத் தூங்கினேன்னுதான் முன்னமேயே சொல்லிட்டேனுங்களே!”