(7)
மனிதனை மனிதனாக அங்கீகரிக்கும் முதற் பட்டயமாக விளங்கவல்லது அவனுடைய மனிதாபிமானம்!
ஆம்; இந்த மனிதாபிமானம் எனும் மகாசக்திதான் தூய்மையின் உருக்கொண்டு அம்பலத்தரசனை ஒருபடி உயர்த்திக் காட்டிவிட்டது. விதி எனும் தீக்குளிப்பில் மூழ்கி எழுந்த அவன், இப்போது புது மனிதனாகவே உருமாறி விட்டிருந்தான். அவனது மனிதத்தன்மையின் அந்தப் புது உணர்வும் புதுச் சக்தியும்தான் ஊர்வசியை ஏற்றுக்கொண்டு அவளை வாழ்த்தும் கடமைத் தெம்பை அவனுக்கு நல்கின. அதன் காரணமாகவே, அவன் கோழையாகவும் ஆகவில்லை; வேடதாரியாகவும் ஆகவில்லை. அதன் விளைவாகவே, ஊர்வசிக்கு வாய்த்த களங்கத்தையும் தானே வலிய ஏற்றுக்கொள்ளவும் துணிந்தான். விஷத்தைத் தன் கண்டத்தில் தாங்கிக் கொண்ட ஐயனைப் போலே!
மனம் ஒர் ஆழி. நெஞ்சில் அலைகள் ஆர்ப்பரித்தன.
என்னை யார் வாழ்த்தினாலும் வாழ்த்தாவிட்டாலும், என் ஊர்வசியும் என் மகாத்மாவும் கட்டாயம் என்னை வாழ்த்துவார்கள். அதுபோதும் எனக்கு!.. இந்த ஒர் அமைதியே அறமாகத் தோன்றியது அவனுக்கு. நான் நல்லவன் இல்லை. என் பருவ இச்சையைத் தணிக்க இரண்டொரு விலை மாதர்கள் நேற்றுவரை காத்திருந்தார்கள்! நான் நேற்றுவரை நல்லவனாக இருந்தது இல்லைதான். ஆனாலும் என்னை நம்ப