பக்கம்:கதாநாயகி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்*53


அறிமுகப்படுத்தி வைக்கவேண்டும். இனி, எனக்கு என் குடும்பத்தைப் பற்றியும், ஊர்வசியின் குடும்பத்தைப் பற்றியும்தான் கவலை. ஊர் வாய்க்கு மூடி ஏது? ஊர்வசிக்கு புனர்ஜென்மம் கொடுத்துவிட்டேன்; அவளுக்குப் புதுவாழ்வு கொடுக்கப்போகிறேன்! இனி நான் நல்லவன். நல்லவனாகவே இனிமேல் இருப்பேன். இனி எனக்கு வாழ்வு என் ஊர்வசியேதான்!...'

எண்ணங்கள் ஒடி நிலைத்தன. அவ்வுணர்ச்சிச் சுழலில் அவனது கவிதை மனம் விழிப்புக் கொண்டது! தொடக்கமே, அழகிய கவிதையாக வழியத் தலைப்பட்டது. ஊர்வசியின் சிரிப்பு அவன் மனத்தில் சிற்றலை எழுப்பியது. தன்னை மறந்தான்.

அப்போது :

"என்ன, தீவிரமான சிந்தனையிலே லயிச்சுட்டீங்களே மிஸ்டர் அம்பலத்தரசன்? பாலன்ஸ் ஷீட்டை பூராவும் டைப் செய்திட்டு, பாக்கிச் சிந்தனையைத் தொடரக் கூடாதா?" என்று வருந்தினார் முதலாளி. இரும்புக் கடையில் புழங்கிய மனிதர் அவர். செம்புதாஸ் தெருவில் பழம் தின்று கொட்டை போட்டவர். அவர் தின்று போட்ட கொட்டைதான் இப்படி இரும்புக்கடையாக உருமாறிவிட்டதோ, என்னவோ?

"மன்னிச்சிடுங்க என்னை, ஏதோ சிந்தனை" என்று தன் தவறை உணர்ந்து ஒப்புதல் தெரிவித்த நிம்மதியுடன், 'ரெமிங்க்டனை' ச் சரணடைந்தான், அம்பலத்தரசன்.

சாவி கொடுக்கப்பட்ட காலக்கடிகாரம், ஒழுக்கம் கெடாமல் பணி இயற்றுவதே ஒரு விந்தைதான்!

'பாலன்ஸ் ஷீட்' மூன்றாம் தடவைதான் உருப்படியாக உருப்பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/63&oldid=1319065" இலிருந்து மீள்விக்கப்பட்டது