54*கதாநாயகி
சாப்பாட்டு வேளை வந்தது.
அம்பலத்தரசன் சாப்பாட்டுக்கு மண்ணடிக்கு விரைந்தான். சாப்பாடு பரிமாறப்பட்டிருந்தது. ஆனால், அவனோ ஊர்வசியின் கடிதத்தைப் பிரித்துப் படிப்பதில் ஈடுபட்டான்.
கடிதம் பேசுகிறது:
“அன்பிற்குரியீர்!
பறிக்கப்பட்டுவிட்ட பெண்மையின் அலறல் அமைதிப்பட்ட நிலைமையில் நான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கறைப்பட்ட பெண்ணாக நான் உங்களை நம்பி வந்தேன். என் நம்பிக்கையை நீங்கள் காத்துத் தந்துவிட்டீர்கள். அந்த ஒரு புண்ணியத்துக்கு நன்றி தெரிவிக்கவும் இவ்வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விழைகிறேன்.
என்னை ஆள வந்த தெய்வமாக நீங்கள் எனக்குத் தரிசனம் தருகிறீர்கள்.
என் நிமித்தம், என் களங்கத்தையெல்லாம் வலிய ஏற்கத்துணிந்த உங்களது மனிதத்தன்மையை, மனிதாபிமானத்தை என் ஆயுள் முழுவதும் மறக்கவே முடியாது; மறக்கவும் மாட்டேன்.
உங்கள் கடமை பொறுப்பு மிகுந்தது!
எனக்கென ஒரு காப்பு வேண்டுமென்று நான் பல காலமாகவே கனவு கண்டு வந்திருக்கிறேன். அந்தக் காப்பு காலங்கடந்து எனக்கு கிட்டியிருக்கிறது.
நான் நடித்த முதல் நாடகத்துக்குத் தலைமை தாங்கினீர்கள் நீங்கள். வழுக்கி விழுந்தவளாக நான் நாடகத்தில் நடித்தபோது, கற்பு நிலை தவறிய என்னை , நாடகத்தில் அவ்வாறு ஆக்கப்பட்ட என்னை நாடகத்தில் ஏற்றுக்கொள்ள முன்வந்த கதாசிரியரின் சமூகப்பணிச் சீர்திருத்தத்தைத் தாங்கள்