கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1
வனை ஆன்மாக்கள் பற்றிக் கொண்டால், அவனுடைய சிரிப்பாகிய ஞானாக்கினியினால் மூன்று மலங்களும் சாம்பலாகிவிடும்.
"கருமருவு குகையனைய காயத்தின் நடுவுட்
களிம்புதோய் செம்பனையயான்
காண்டக இருத்தியே ஞானஅனல் மூட்டியே
கனிவுபெற உள்உருக்கிப்
பருவம தறிந்துநின் அருளான குளிகைகொடு
பரிசித்து வேதிசெய்து
பத்துமாற் றுத்தங்கம் ஆக்கியே பணிகொண்ட
பட்சத்தை என்சொல்லுவேன்"
என்று இந்த ரஸவாதத்தைப் பற்றித் தாயுமானவர் பாடுகிறார். "குகையாகிய உடம்பில் களிம்பு தோய்ந்த செம்பைப் போல் உள்ளவன் ஆன்மாவாகிய நான். என்னை ஞான அனலால் உருக்கிக் களிம்பைப் போக்கி அருளாகிய குளிகையைக் கொண்டு தங்க மாக்கினாய்" என்கிறார்.
"ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள்ளுருக்கி என்பதைக் கவனிக்க வேண்டும். ஞானத்தினால் உருக்கம் உண்டாகும். உள்ளம் உருகாவிட்டால் கனிவு இல்லை; இரக்கம் இல்லை; அருள் இல்லை; பிறருடைய துன்பத்தைக் கண்டு இரங்கும் இளகிய மனம் இல்லை. அன்பர்கள் இறைவனைத் துதிக்க அவர்களுடைய மனத்திலே இளக்கம் ஏற்படும்; உள்ளம் உருகும். ஞானத்தீயினாலே உயிரைப் பற்றிக் கொண்டிருக்கிற மலமாகிய களிம்பு பொசுங்கிப் போகும். களிம்பு நீங்கிய தாமிரம் தங்கத்தோடு தங்கமாகச் சேர்ந்து விடுவதைப் போல, மலமாகிய களிம்பு நீங்கிய ஆன்மா இறைவனைச் சார்ந்து விடும். இறைவன் தன்னுடைய சிரிப்பினாலேயே ஆன்மாக்களைப் பற்றியிருக்கிற மும்மலக் கோட்டைகளை எரித்துவிடுகிறான். தீயவர்களை அவன் சுட்டு எரிப்பதில்லை; அவர்களிடமுள்ள தீமையையே போக்கி ஆட்கொள்கிறான். இத்தனை பெரிய தத்துவங்களை விளக்குகிறது திரிபுர சங்காரம். அதனைச் செய்தவனுடைய பிள்ளை முருகன்.
தேரணியிட்டுப் புரம்எரித் தான்மகன்
அந்த மகனாகிய முருகன் செங்கையில் வேல் இருக்கிறது.
11O