பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சிக் கிழவன்

அந்தக் குழந்தை ஒரு தடவை மாத்திரம் அழுததா? ஆறு பெண்களை அழைக்க வேண்டாமா? ஆறு முறையாவது அழுதிருக்க வேண்டும். எப்படி அழுதது? விம்மி விம்மி அழுததாம்.

அறுவர் கொங்கை
விரும்பிக் கடல் அழக் குன்று அழச்
சூர்அழ விம்மி அழும்
குருந்தை

ஒரு முறை அழுதவுடனே கடல் அழ ஆரம்பித்துவிட்டது. இரண்டாவது சரணம்போல் மறுமுறை அழுதவுடனே, அதன் எதிரொலிபோல் மலை அழ ஆரம்பித்துவிட்டது. மூன்றாவது சரணம்போல் அடுத்த முறை அழுதவுடனே அதன் எதிரொலி போலச் சூரபன்மன் அழ ஆரம்பித்துவிட்டான்.

இப்படிப் பால் குடித்துத் தொட்டிலில் தூங்கி அழும் பச்சிளங் குழந்தையைக் கிழவன் என்று சொல்லலாமா? பொருத்தமற்றதாகக் காட்டி இப்படிச் சொல்வதில் ஓர் அழகு இருக்கிறது. கிழவன் என்ற சொல்லுக்கு இப்போது இரண்டு பொருள்கள் உண்டு. உரியவன் என்பது ஒன்று. முதியவன் என்பது ஒன்று. இளங் குழந்தையைக் கிழவன் என்று சொல்லலாமா என்று கேட்கும் கேள்வி, கிழவன் என்பதற்கு முதியவன் என்ற பொருளை மாத்திரம் எண்ணி, இரு முரணன்றோ என்ற கேட்பது போல இருக்கிறது.

இந்தப் பாட்டில் "திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால் அருந்தி" என்னும் பகுதி முருகனது ஒரு திரு விளையாடலைக் குறிக்கிறது. “சரவணப் பூந்தொட்டிலேறி" என்பது இரண்டாவது திருவிளையாடல். "அறுவர் கொங்கை விரும்பி" என்பது மூன்றாவது திருவிளையாடல். "கடலழக் குன்றழச் சூரழ விம்மி அழும், குருந்தை" என்பது நான்காவது திருவிளையாடல். இப்படி இந்த நான்கு அடிகளிலும் நான்கு திருவிளையாடல்கள் அடங்கி இருக்கின்றன. கந்தபுராணத்தில் இருவேறு பகுதிகளில் இவற்றைக் காணலாம். முருகன் உமா தேவியாரின் பாலைக் குடித்தது, சரவணப் பூந்தொட்டிலில் விளையாடியது. கார்த்திகை மாதர்கள் ஆறு பேர்களின் பாலைக் குடித்து வளர்ந்தது ஆகிய மூன்று திருவிளையாடல்களும் கந்த

167