பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சிக் கிழவன்

"சிவமெ னும்பொருளும் ஆதி சக்தியொடு
சேரின் எத்தொழிலும் வல்லதாம்
அவள்பி ரிந்திடின் இயங்குதற்கும் அரிதாம்"

என்று செளந்தரியலகரியில் சங்கராசாரிய சுவாமிகள் சொல்கிறார். புவனங்கள் எல்லாம் தந்தவன் பரமேசுவரன் என்றாலும் அவருடைய அருட்சக்தி தந்தது என்றாலும் ஒன்றுதான்.

அம்மை உலகத்தைப் படைத்து அதில் உயிர்களை விடுவதற்கு, அவை எல்லாம் நல்வழிப்பட வேண்டுமென்பதே காரணம். தாய்க்குக் குழந்தை திருந்த வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்புதானே?

எம்பெருமாட்டிற்கு அழகழகான ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் அந்த நாமங்களுக்கெல்லாம் முதன்மையாக லலிதா சகசிர நாமத்தில் "ஸ்ரீமாதா” என்ற நாமத்தை வைத்திருக்கிறார்கள். எல்லா உயிர்களுக்கும் மாதாவாக விளங்குபவள் எம் பெருமாட்டி தான். தான் படைத்துக் கொடுத்திருக்கிற இந்தப் புவனத்தில் உயிர்கள் தனுவாகிய உடலைப் பெற்று, அதில் அமைந்துள்ள கரணங்களைப் பெற்று, அதனாலே இன்ப துன்ப போகங்களை எல்லாம் பெற்று, ஞானத்தைப் பெற்றுத் திருந்தி உய்ய வேண்டுமென்பது உலகன்னையின் விருப்பம். உயிர்கள் திருந்த வேண்டுமென்பதற்காகப் புவனங்களைப் பெற்றாள். துன்பமயமான இறப்பு, பிறப்பு என்னும் பிணிகளினால் உயிர்கள் பீடிக்கப்பட்டு ஆனந்தம் என்பதை அடையாமல் உலகத்தோடு ஒட்டிய சுகம், துக்கம் ஆகிய இரண்டு விதமான அநுபவங்களில் உழன்று வாழ்கின்றன. இப்படி வாழ்கின்ற தன் குழந்தைகளைக் கண்டு, 'இவர்களுடைய வாழ்வில் ஆனந்தம் இல்லையே! இவர்கள் எல்லோரும் ஆனந்தம் பெற்று உய்ய வேண்டாமா?' என்று நினைத்து இந்தப் புவனங்களைப் படைக்கிறாள். நல்ல குழந்தைகளை எல்லாம் அனைத்துக் கொள்கிறாள். தாய் சொல் கேளாத துஷ்டக் குழந்தையாக இருந்தாலும் அதன் போக்கிலேவிட்டு வேண்டிய பொருள்களை எல்லாம் கொடுத்துக் காலப்போக்கில் திருத்துகிறாள். இவ்வளவு காரியங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது அவள் நெஞ்சில் உள்ள தாயன்புதான். நாம் எல்லோரும் இந்த உலகத்தில் பிறந்து துன்பப்பட வேண்டுமென்பதற்காக எம்பெருமாட்டி இந்தப் புவனங்களை உண்டாக்கவில்லை. உயிர்கள்

171