பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தனிப்பரமானந்தம்

அது மாத்திரம் அல்ல. இறைவனது தியானம் எளிதில் மனிதனுக்குக் கிட்டாது. பழக்கத்தால் பல படிகளை ஒவ்வொன்றாகக் கடந்தால்தான் முன்னேற முடியும். மாடி ஏறும்போது ஒவ்வொரு படியாகக் காலைத் தூக்கி வைத்துக் கொண்டுதான் ஏறுகிறோம். இருநூறு வார்த்தைகளை ஒரு குழந்தை ஒரே நாளில் கற்றுக் கொண்டுவிட முடியுமா? ஒவ்வொரு வார்த்தையாகத்தான் அது கற்றுக் கொள்ளும். வாயிலே போட்ட கவளத்தை நன்றாக மென்று உள்ளே செலுத்திய பிற்பாடுதான் மற்றொரு கவளத்தை எடுத்துப் போட்டுக் கொள்கிறோம்.

அந்த வகையில் இறைவனது தத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் மெல்ல மெல்ல உள்ள வேண்டும். மெல்ல மெல்ல என்பது தாமச குணத்தைச் சொல்லவில்லை. அமைதியாகத் தியானம் பண்ண வேண்டும். நாம் ஒவ்வொரு தடவையும் அவன் திருநாமத்தை உச்சரிக்கும்போது அது நமது உள்ளத்திலே பதியும்படியாகத் தியானிக்க வேண்டும். அப்படித் தியானித்தால் இன்பம் உண்டாகும். அவனை இருதயம் ஒன்றி மெல்ல மெல்ல உள்ளினால்தான் ஆனந்தம் அரும்பும்; பரமானந்தம் அரும்பும்; தனிப் பரமானந்தம் அரும்பும்; நாம் சுகமென்று சொல்லும் நுகர்ச்சிக்கு அப்பாற்பட்ட மிக உயர்ந்த இன்பம் அந்தத் தனிப் பரமானந்தம். தனி என்பது ஒப்பற்றது என்பதைக் குறிப்பது. தனக்குச் சமானம் இல்லாத, மேல் ஒன்றும் இல்லாத, மிக உயர்ந்த ஆனந்தம் அது. அது இறைவனை மெல்ல மெல்ல உள்ளுவதனால் அரும்பும்.

ஆனந்தம் அரும்புதல்

ன்றாகப் பசி உடைய ஒருவனுக்கு உணவைப் படைத்தால் ஒரு பிடி சாப்பிட்டவுடனேயே அவன் பசி தீர்ந்துவிடாது. ஓர் அளவுக்கு பசி தீரலாம். அதைப் போல இறைவன் நாமத்தை ஒரு முறை சொன்னால் அந்த அளவுக்குப் பயன் உண்டு. மெல்ல மெல்லத் தியானிக்க ஆரம்பித்தால் ஆனந்தம் உண்டாகிறது. மேலும் விடாமல் சொன்னால் பரமானந்தம் உண்டாகிறது. சொல்லிக் கொண்டேயிருந்தால் தனிப் பமானந்தம் அரும்புகிறது. சொல்லிக்கொண்டே இருக்கும் ஒரு நிலையை எய்திய பின்தான் அந்த இன்பம் உண்டாகும் என்பது அல்ல. ஒரு பிடி கவளம்

205