பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

இப்படியே கண்ணனைப் பற்றியும் சொல்லலாம். பாகவதக் கதைகளை வைத்துப் பார்த்தால் கண்ணன் ஆயிரமாயிரம் வேறுபட்ட கோலங் கொண்டு விளங்குவது தெரியும்.

சிவபெருமானைப் பற்றிய எண்ணங்களின் விரிவு கரை காண முடியாதது. தமிழ்நாட்டில் அவை மிக மிக அதிகம். மகா புராணங்களில் காணப்பெறும் மூர்த்தங்கள் பல. அந்த அந்தத் தலங்களின் இறைவன் இயற்றிய திருவிளையாடல்களோடு தொடர்புடைய கோலங்கள் அளவிறந்தன. மதுரைத் திருவிளையாடல் அறுபத்து நான்கு. அவற்றோடு தொடர்புடைய கோலங்கள் அறுபத்து நான்குக்கும் மேற்பட்டவை. திருவாரூர்த் தியாகராச லீலை முந்நூற்றறுபது. ஒவ்வொரு லீலைக்கும் ஒரு கோலத்தை வைத்துக் கொண்டாலும் முந்நூற்றறுபது திருக்கோலங்களை நினைக்கலாம்.

முருகனுக்கும் புராணங்கள் கூறும் கோலங்கள் பல. தியான சுலோகங்களில் காட்டும் உருவங்கள் பல. அருணகிரியார் உள்ளக்கிழியில் உருவெழுதிக் கண்டவை கணக்குக்கு அடங்காதவை. அவருடைய உலகமே தனியானது. அது விரிந்து விரிந்து செல்கிறது. இப்போது கிடைக்கும் 1300 திருப்புகழைப் பார்த்தாலே அருணகிரியாரின் அன்பு விரிவையும் உள்ள விரிவையும் உணர்ந்து பிரமிக்கிறோம். அவர் இயற்றிய பதினாயிரம் திருப்புகழ்ப் பாடல்களும் கிடைத்திருந்தால்...?

தெய்வங்களின் திருவிளையாடற் சிறப்பையும் திருக்கோல அழகையும் தமிழர் உணர்ந்து நுகரும் அளவுக்கு மற்றவர்கள் நுகர இயலாதென்றே தோன்றுகிறது. கல்லிலும், சொல்லிலும் தெய்வங்கள் உருக் கொண்டிருப்பதைக் கொண்டே இதைத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழில் முருகனைப் பற்றிய செய்திகள் பழங்கால முதற் கொண்டே வழங்கி வருகின்றன. சங்க நூல்களில் திருமுரு காற்றுப்படையும் பரிபாடலும் அவனைப் பாராட்டுகின்றன. அவனுடைய திருக்கோயில்களைப் பற்றிச் சொல்கின்றன. அவனை மக்கள் வெவ்வேறு வகையில் வழிபடுவதையும் காட்டுகின்றன.

238