பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

பெற்று, அதனைப் பிறருக்குச் சொல்லாமல் போய்விடுவார்கள். சிலர் தாம் பெறுவதோடுகூடப் பிறருக்கும் உணர்த்த எண்ணி, அது சொல்ல முடியாததாதலால் குறிப்பாக உணர்த்திப் போவார்கள். அப்படிப்பட்ட மெய்ஞ்ஞானிகளே சித்தர்கள்.

"மாங்காய்ப்பா லுண்டு மலைமேல் இருப்பார்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி? - குதம்பாய்!

என்ற பாட்டைப் பார்த்தால் என்ன விளங்குகிறது? மாங்காய்ப் பால் என்றால் என்ன? மலைமேல் அதை உண்ணுவது என்பது என்ன? பச்சை மாங்காயைக் கிளையில் இருந்து ஒடிக்கும்போது பால் சொட்டும். அதற்குத்தான் பால் என்று பெயரேயன்றி மாங்காய்க்குள் இருக்கும் சாற்றைப் பால் என்று சொல்ல மாட்டார்கள். மாங்காயின் காம்பிலிருந்து வருகின்ற பால் எப்படிப்பட்டது என்பது நமக்குத் தெரியும். குழந்தைகள் அதனைக் கடிக்கும் போது தப்பித் தவறி அந்தப் பால் உதட்டிலே பட்டுவிட்டாலே புண் உண்டாகிவிடும். மேலே பட்டால் புண்ணாகும். அந்தப் பாலையே உண்பவன் எத்தகையவனாக இருக்க வேண்டும்? அந்த ஆசாமி நெருப்பைச் சாப்பிடுகிறவனாகத்தான் இருக்க வேண்டும். அந்தப் பாலை அவன் உண்டு மலை மேலே இருக்கிறான்; அமைதியாக இருக்கிறான். அவன் பெரிய பேர்வழி அல்லவா?

இதன் பொருள் என்ன? பிறருக்குத் துன்பத்தைத் தருகின்ற ஒன்று அவனுக்குத் துன்பம் தரவில்லை. எல்லோருக்கும் துன்பத்தைத் தருகின்றவை பொறிகள். அவை இந்த உடம்பில் இருந்தாலும் அவை அவனுக்குத் துன்பத்தைக் கொடுப்பதில்லை. நாம் நம்முடைய ஐந்து பொறிகளுக்குள் அடங்கிச் செயல்புரிந்து துன்பத்தை அடைகின்றோம். அவனோ ஐந்து பொறிகளையும் அடக்கினவன். ஐந்து பொறிகளும் அவனுக்கு அடங்கிச் செயல்புரிகின்றன.

நமக்கு ஐந்து பொறிகளும் மாங்காய்ப் பாலைப் போலப் புண் தருகின்றன. வாயிலே புண் ஏற்பட்டால், புண்ணை ஆற்றுவதற்குத் தேங்காய்ப்பால் சாப்பிட வேண்டும். ஐந்து இந்திரியங்களினாலே ஏற்படுகின்ற புண்ணை ஆற்றுவதற்குத் தினப்படி பூசை முதலிய நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்ய வேண்டி

256