பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

அது மாத்திரமா? நல்ல மழைக்காலம் வந்தது. மழைத் தண்ணிர் தேங்கி நின்ற குட்டையில் தவளைகள் இருந்தன. இரவுக் காலங்களில் அவை ஒன்றாகச் சேர்ந்து சங்கீதம் பாட ஆரம்பித்து விட்டன. அவற்றின் குரல் அவனுக்கு எப்படிக் கேட்டது? பக்தர்கள் எல்லோரும் சேர்ந்து "ஹர ஹர" என்று சொல்வது மாதிரியாக அவனுக்குத் தோன்றியதாம். "ஹர நாமத்தைச் சொல்லும் இந்த நல்ல பிராணிகளுக்கு உணவை வீசுங்கள்" என்று அவன் சொன்னான். இறைவனுடைய நினைவு அவன் உள்ளத்திலே பதிவு பெற்றுவிட்டதால், காணும் பொருள்களிடத் தெல்லாம் அவன் இறைவனுடைய தொடர்பைக் கண்டான். அந்த மாதிரியாக நமக்கும் தோன்றவில்லையே என்றால் நமக்கு எப்படித் தோன்றும்? கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டிருக்கிறவனுக்கு உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களும் காக்கையைப் போலக் கறுப்பாகத்தான் தோன்றும். காமாலைக் கண்ணனுக்குக் கண்டனவெல்லாம் மஞ்சளாகத்தானே தெரியும்? இறைவனது அருளாகிய வெளிச்சம் நமது உள்ளத்தில் அடித்தால்தான் உலகத்திலுள்ள பொருள்களின் உண்மை தெரியும்.

இருட்டிலே ஊரிலுள்ள திக்குத் திசை தெரியவில்லை. சூரியன் வந்த பிறகு அந்த ஊரில் இருக்கிற இடம் தெரிந்தது. மிகப் பெரிய மலை தெரிந்தது. அதைப்போல அஞ்ஞானமாகிய இருட்டிலே அகப்பட்டு நாம் எல்லோரும் இந்த உலகத்தில் ஒன்றும் தெரியாமல் தவிக்கிறோம். நம்முடைய வீடு என்று எதனையோ எண்ணிக்கொண்டிருக்கிறோம். அருளாகிய ஒளி வந்தால்தான், “நாம் யார்? நமக்கும் இவ்வுலகிலுள்ள பொருள்களுக்கும் என்ன சம்பந்தம்? இவ்வுலகிலுள்ள பொருள்களின் உண்மை இயல்பு என்ன? நமது உண்மையான வீடு எங்கே இருக்கிறது?" என்பவை தெரிகின்றன. உலகத்தைத் தெரிந்து கொண்டால் போதுமா? போதாது. உலகம், உயிர், கடவுள் என்ற மூன்று பொருள்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். உலகத்துப் பொருள்களைத் தெரிந்து கொண்டவுடனே, தான் எங்கே இருக்க வேண்டியவன் என்று தெரிந்து கொண்டு, அந்த நிலையை எய்துவது எப்படி எனத் தெரிந்து கொள்கிறான். முன்பு நாம் அப்படி அருவருக்கத் தக்க நிலையில் இருந்தோம் என்பதையும் காண்கிறான். தான் இருக்கிற நிலையிலிருந்து மேலே அண்ணாந்து

260