பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளிகோன் உபதேசம்

தேன் என்று பாகுஎன்று உவமிக்
கொனாமொழித் தெய்வவள்ளி
கோன், அன்று எனக்குஉப
தேசித்தது ஒன்றுஉண்டு.

"வள்ளிமணாளன் எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு" என்று உண்டு என்ற வார்த்தையை ஒரு முறை சொன்னார். அப்புறம் எத்தனை 'அன்று' சொல்கிறார் பாருங்கள்:

கூறவற்றோ?
வான்அன்று, கால்அன்று, தீஅன்று
நீர்அன்று, மண்ணும் அன்று,
தானன்று, நான்அன்று,
அசரீரிஅன்று, சரீரிஅன்றே.

உண்டு என்ற வார்த்தையை ஒரு முறை சொன்னவர் 'அன்று' என்ற வார்த்தையை ஒன்பது முறை சொல்லிவிட்டார். இந்தப் பாட்டில் அவ்வளவுதான் அடங்கும்; ஆதலால் ஒன்பதுமுறை சொல்லி நிறுத்தினார். மேலும் சொல்லிக்கொண்டே போனால் பாட்டு நீளமாகப் போகும். வேதமே, அன்று, அன்று என்று சொல்லி இளைக்கிறது என்றால், அருணகிரிநாதர் எவ்வாறு முற்றும் சொல்ல முடியும்? உண்டு என்றால் ஒன்று சொன்னால் போதும். அன்று என்றால் அந்த வரிசைக்குக் கணக்கில்லை; முடிவில்லை; சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

வள்ளி நாயகி

தாம் அடைந்த இன்ப அநுபவத்தைச் சொல்ல வருகிற பொழுதெல்லாம், அருணகிரியாருக்கு வள்ளி பெருமாட்டியின் நினைவும் உடன் வரும். ஆறாவது பாட்டில், அரும்பும் தனிப் பரமானந்தம் பற்றிச் சொன்னார். அந்த இன்பத்தைத் தரக் கூடியவன் குறப் பெண்ணாகிய வள்ளியம்மையிடம் தான் இன்பம் அடைபவனைப் போலச் சென்ற குமரன் என்று, வள்ளியம்மையைச் சேர்த்துக் சொன்னார். சாதாரணமாகப் பாலை வெள்ளிக் கிண்ணியில் வைக்கிறோம். மண் குடுவையில் கள்ளை வைக்கிறார்கள். பாலை மண் குடுவையில் வைத்தால் அது கள்ளாகிவிடுமா?

277.