பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

நினைக்கத் தோன்றும். இது பக்தியினால் ஏற்படுகின்ற தாபத்தின் விளைவு. அதனால் பல பழிச் சொற்கள் வெளிப்படுகின்றன. இறைவனது அருள் கிடைத்துவிட்டால், தாபம் அடங்கிய தன்மை பிறந்துவிட்டால், பேச்சு எங்கே வரும்? எல்லாம் இழந்த நலம் பிறக்கும்.

வள்ளியின் தன்மை

கல்வரைக் கொவ்வைச்செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல்
வல்லபமே.'

ற்கள் நிரம்பிய மலையில் பிறந்த வள்ளியை, கோவைப் பழம் போலச் சிவந்த வாயை உடைய வள்ளியை, தன்னுடைய பெரிய மலை போன்ற தோளில் அணைந்தான் முருகன். வள்ளி வாழ்ந்தது மலை. அவள் அடைந்ததும் மலைதான். குறமகளாகக் கல் மலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் வரையிலும் அவளுக்கு இன்பம் இல்லை; துன்பந்தான் இருந்தது. முருகனது தோளாகிய மலையை அடைந்தவுடன் இன்பம் உண்டாயிற்று. உயிரானது ஒன்றோடு இணைந்தே இருக்கும். பாசத்தோடாவது பதியோடாவது சேர்ந்தே இருக்கும். பாசத்தோடு இணைந்திருக்கிற வரையில் அதற்குத் துன்பந்தான். பதியோடு இணைந்துவிட்டால் இன்பம் உண்டாகும். கல் நிரம்பிய மலைகளிலே உறைந்திருந்த வள்ளியின் நிலை, ஆன்மா பாசத்தோடு இணைந்திருப்பதற்கு ஒப்பானது. வள்ளி முருகப் பெருமானது மலை போன்ற புயங்களின் அணைப்பைப் பெற்ற நிலை ஆன்மா பதியை அடைந்ததற்குச் சமானம்.

"கொல்லிப் பண்ணைப் போன்ற இனிமையான சொல்லை உடையவளும், சிவந்த வாயை உடையவளும் மலையில் பிறந்த வளுமாகிய வள்ளியை, தன் புயங்களாகிய மலையில் முருகன் அணைந்தான். அவன் அருள் வல்லமை இருக்கிறதே, அது என்னைப் பேச்சு அற்ற மோன நிலையான சும்மா இருக்கிற எல்லைக்குள் செல்ல விட்டது; எல்லாம் இழந்த இன்ப நலத்தை அளித்தது" என்கிறார் அருணகிரியார்.

302