பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மயிலின் வேகம்


மேரு அசைதல்

அசைந்தது மேரு

மேருமலை அசைந்தது. பொன்னிற மலை மேரு என்பார்கள். பிரபஞ்சத்துக்கு நடுவில் தூண் போல நிற்பது அது. சூரியனும் சந்திரனும் அதைச் சுற்றி வருகிறார்கள். அந்த மலையின் மீதுதான் தேவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம். அதனால் அதற்குச் சுராலயம் என்று பெயர் உண்டு. பூமியின் நடு அச்சுப் போல் இருக்கிறது அது. அதை யாராவது கண்டது உண்டோ என்ற கேள்வி எழலாம். பூகோளத்தில் பூமத்திய ரேகை என்று ஒன்றைச் சொல்கிறார்கள். உலகத்தின் நடுவிலுள்ள கோடு இது. இந்தக் கோட்டின் பக்கத்தில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும்; பாலைவனம் அதிகம் என்று படிக்கிறோம். இந்தக் கோட்டை யாராவது கண்ட துண்டா? இல்லை. இது மானசீகக் கோடு. ஆனால் இது உண்மை என்று கொண்டே பல கணக்குகளைப் போடுகிறார்கள். அவை யாவும் உண்மையல்லவா? உண்மைதான். அந்தக் கோடு கற்பனையில் அமைந்தாலும் எப்படி இருப்பதாகவே கொள்கிறார்களோ அப்படியே மேருவும் இருப்பதாகவே புராணக்காரர்கள் கொள்கிறார்கள். வண்டிச் சக்கரம் கீழே விழாமல் சுற்றி வருகிறது. அவ்வாறு செய்வதற்குக் காரணமாகச் சக்கரத்திற்கு நடுவில் அச்சு இருக்கிறது. அது இரும்பால் அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். உலகம் சுற்றிக் கொண்டே இருக்கிறது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள். இது சுற்றிக் கொண்டே இருக்க வேண்டுமானால் நடு அச்சு ஒன்று வேண்டாமா? அந்த அச்சைத்தான் மேருகிரி என்றனர் நம் பெரியோர். விஞ்ஞானத்தில் ஒரு பொருளை மிக நுட்பமாகச் சொல்வார்கள். புராணத்தில் பருப் பொருளாகச் சொல்வார்கள்.

மேரு கிரி பொன்மயமானது என்று சொல்கிறார்கள். அதற்கும் ஒரு பொருள் உண்டு. இரும்பு, வெள்ளி, செம்பு, தங்கம் முதலிய எல்லா உலோகங்களுமே பூமிக்குள் இருந்துதான் கிடைக்கின்றன. எல்லா உலோகங்களிலும் சிறந்தது தங்கம். உலகிற்கே நடு அச்சுப் போல் மிக உயர்ந்து இருக்கிற மலையும் பூமியில் இருந்து கிடைக்கும் உலோகங்கள் எல்லாவற்றையும் விட மிக உயர்ந்த தங்கத்தால் ஆனது எனக் கதையாகச் சொன்னார்கள்.

315