பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிங்கிணி ஓசை

சூரபன்மனுடைய கொடிய ஆட்சியைப் போக்க இயலாமல், நாம் நம் இன்ப வாழ்வை இழந்து திண்டாடுகிறோமே! இனியும் நமக்கு எந்த நிலை வருமோ என்று அஞ்சிக் குலைந்து கொண்டிருந்த தேவர்களுக்கு இப்போது அந்த அச்சம் போய் விட்டது; நம்பிக்கை உதயமாயிற்று.


   தேவர் பயம் கெட்டதே.

சூரியன் வானத்தில் தோன்றும்போது மக்கள் துயிலுணர்ந்து எழுந்து சுறுசுறுப்போடு வேலை செய்யப் புகுகிறார்கள். பறவைகள் சிறகையடித்துக்கொண்டு பறக்கின்றன. தாமரை மலர்கள் மலர்கின்றன. ஆனால் எலும்பில்லாத புழுக்கள் இறக்கின்றன. குவளை கூம்புகிறது. ஆந்தை அஞ்சுகிறது. அவை தம் இயல்புக்கு ஏற்ற பயனை அடைகின்றன. அவ்வண்ணமே, இங்கே முருகன் திரு வரைக் கிண்கிணி ஓசையைக் கேட்டுத் தேவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் முக மலர்ச்சி பெறுகிறார்கள். அதுகாறும் தாம் பெற்றிருந்த அச்சத்தை உதறுகிறார்கள். ஆனால் அசுரர்களோ வாட்டமுறுகிறார்கள். அதுகாறும் அவர்கள் அறியாத அச்சமும் நடுக்கமும் அவர்கள் பால் உண்டாகின்றன.

முருகன் பராக்கிரமம்

முருகன் கிங்கிணி ஒசையின் இனிமையை அருணகிரிநாதர் இங்கே சொல்லவில்லை. எல்லாக் குழந்தைகளின் கிண் கிணிக்கும் அந்த இனிமை உண்டு. அது கிங்கிணியின் இயல்பேயன்றி, குழந்தையின் பெருமை அன்று. முருகன் திருவரைக் கிங்கிணி ஒசையினால் விளையும் விளைவுகள் அந்தக் கிங்கிணியால் விளைந்தவை அல்ல. முருகனால் விளைந்தவை. கிங்கிணி முருகன் அணிந்ததாக இருப்பதனால் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்தன. ஆதலின் கிங்கிணியைப் புகழும் முகத்தால் முருகனுடைய பராக்கிரமத்தையே அருணகிரிநாதர் எடுத்துக் காட்டுகிறார்.


   ஒருவரைப் பங்கில் உடையாள்
     குமாரன் உடைமணிசேர்
   திருவரைக் கிங்கிணி ஓசை
     படத்திடுக் கிட்டரக்கர்

351