பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

'வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் அவர்கள் எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகிய எழுத்தாளர்களுள் ஒருவர். எங்கள் நிறுவனர் வி.குப்புஸ்வாமி ஐயருக்கு, மூத்த குமாரர் போல் பழகி வந்தவர். அவருடைய நூல்கள் நமது நிறுவனத்தின் மூலம் மூன்று தலைமுறையினரால் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இவர் தமிழ் இலக்கியத்தில் கரை கடந்தவர்; ஆன்மிகத்தில் பரம்பொருளைக் கண்ட ஞானி. எனவே இவரை 'ஞானப் புலவர்' என்று கூறினால், அது மிகையாகாது. இப்புவியில் அவ்வப்போது இப்படிப் பல ஞானப்புலவர்கள் தோன்றிக் கொண்டே இருப்பதால்தான், நமது மொழிச் செல்வமும், ஞானச் செல்வமும், இறைவனது கட்டளைப்படி காப்பாற்றப்பட்டு வருகின்றது எனலாம். இப்போதும் நம்மிடையே திரு. சுகி சிவம், திரு. பி.என். பரசுராமன் போன்ற பல ஞானப்புலவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் சாதாரண மனித சக்தியை மீறி, இறைவன் திருவருளால், ஏராளமான சொற்பொழிவுகளையும்; நூல்களையும் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள். பிறவிப் பெருங்கடலை நீந்த நமக்கு வழிகாட்டியாக விளங்குகிறார்கள். இவர்களுடைய பேச்சுக்களையும், எழுத்துக்களையும் நாம் பின்பற்றி வந்தாலே போதும். அதுதான் அவர்கள் எல்லாம் பாமரராகிய நமக்குக் காட்டும் வழி.

சற்றேறக்குறைய 600 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு ஞானப் புலவர் இருந்தார். அவர்தான் அருணகிரிநாதர். இறைவனை நேரில் தரிசித்து அருளைப் பெற்றவர். இவர் அருளிய நூல்கள் எல்லாம் நமக்கு, பரப்பிரம்மத்தை உணரவைக்கும் வழிகாட்டிகள். இப்படி இவர் அருளிய நூல்களுள் 'கந்தர் அலங்கார'த்திற்கு விரிவான, அழகான, தெளிவான - தொடர் சொற்பொழிவை, ஒரு சமயம் கி.வா.ஜ. அவர்கள் நிகழ்த்தினார்கள். அந்தச் சொற்பொழிவின் தொகுப்புதான் இந்நூல். இதைப் பற்றி அவரே, தனது முன்னுரையில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள்.

1986 வாக்கில் ஒரு நாள், அடியேன், கி.வா.ஜ. அவர்களுடன் 'புரூஃப்' பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர் என்னிடம், "நீ