பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு மனம் கொள்ள வேண்டும். அதற்கு வழி செய்வது ஞானம். அஞ்ஞானத்தைப் போக்கும் முயற்சி தொடங்கும்போது ஞான நாடகம் தொடங்குகிறது. மனிதக் குழந்தைகள் உலகில் வாழும்போது விளையாடும் விளையாட்டு, ஒன்று ஊன நாடகமாக இருக்கும்; அல்லது ஞான நாடகமாக இருக்கும். ஊன நாடகத்தை மாயை நாடகம் அல்லது அஞ்ஞான நாடகம் என்று சொல்லலாம். இந்த நாடகம் அல்லது விளையாட்டு மேன்மேலும் வினைகளை விளைத்துத் திரும்பத் திரும்பப் பிறந்து இறந்து துன்புறும்படி செய்கிறது. சேறும் கரையும் இந்த மாயை விளையாட்டுப் போகவேண்டுமானால் அதற்கு மாறாக ஞான விளையாட்டு விளையாட வேண்டும். அதற்குத் துணை இல்லாமல் நம்மால் முடியாது. சேற்றில் இருப்பவன் ஒருவன் அதில் இருந்து எழவேண்டுமானால் சேற்றுக்கு அப்பால் இருக்கும் ஒருவனது துணை வேண்டும். கால் புதைந்துவிட்டது என்று, அதனை விடுவிக்கக் கைகளையும் சேற்றில் புதைத்தால் கால் வெளியில் வாராது; கையும் சேர்ந்து புதைந்துவிடும். சேற்றில் இருக்கும் வேறு ஒருவனது உதவியை நாடினால் அவனாலும் நம்மை மீட்க முடியாது. தண்ணீருக்குள் மூழ்குகின்றவனைக் காப்பாற்றுவதற்காகக் கரையில் இருந்து தண்ணீரில் குதித்து விட்டால் இரண்டு பேரும் நீரில் மூழ்கி இறந்துவிடுவதைப் பல இடங்களில் நாம் பார்க்கிறோம். அது போலவே சேற்றில் விழுந்தவனைக் கரையேற்றுவதற்குச் சேற்றில் விழுந்த வேறு ஒருவனால் முடியாது. அப்படியின்றிச் சேற்றுக்கு அப்பால் கரையில் ஒருவன் இருந்தால் அவன் கரையேற்ற முடியும்; கரையில் உள்ளவன் கைகொடுத்தாலும் சரி, சேற்றில் இருப்பவன் கையை நீட்டிப் பற்றிக் கொண்டாலும் சரி, கரையேறிவிடலாம். அஞ்ஞான நாடகம் ஆடும் மனம் ஞானநாடகம் ஆடும் கரைக்குப் போக வேண்டும். அந்தக் கரையில் இருக்கின்றவன் எம்பெருமான். அவனுடைய திருவருள் கிடைத்தால் நன்மை உண்டாகும். 261