பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 மிகப் பெரிய போர்கள் என்று சொல்வார்கள். எல்லாவற்றுக்கும் மேலான பெரிய போர் தேவாசுரப் போர் ஆகிய சூரசங்காரப் போர். அது மிகப் பழங்காலத்தில் நடந்தது. அஞ்ஞான அழிவைக் காட்டுவதற்கு அது அடையாளமாக இருக்கிறது. ஆதலால் பண்டு அந்தக் காரியத்தைச் செய்த நீ இன்று அதன் கருத்தாகிய இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமென்று இரண்டையும் சேர்த்து அருண கிரிநாதர் முருகப்பெருமானிடம் விண்ணப்பித்துக் கொள்கிறார். ★ தொண்டர்கண்டு அண்டிமொண்டு உண்டுஇருக் கும்சுத்த ஞானம்எனும் தண்டையம் புண்டரி கம்தரு வாய்சண்ட தண்டவெஞ்சூர் மண்டலம் கொண்டுபண்டு அண்டர்அண் டம்கொண்டு மண்டிமிண்டக் கண்டுஉருண்டு அண்டர்விண்டு ஓடாமல் வேல்தொட்ட காவலனே. இந்தப் பாட்டில் சந்த நயம் நன்றாக அமைந்திருக்கிறது. (அடியவர்கள் கண்ணால் தரிசித்து, நெருங்கி, உள்ளத்தால் மொண்டு, உயிரால் உண்டு அமைதி பெற்றிருக்கும் கத்தஞானமென்னும் தண்டையை அணிந்த அழகிய தாமரை போன்ற திருவடியை அருள்வாயாக, கொடுமையையும் தண்டனை செய்யும் இயல்பையும் வெம்மையையும் உடைய சூரன் படை வியூகத்தைத் துணையாகக் கொண்டு பழங்காலத்தில் தேவர்களுடைய உலகத்தைக் கைப்பற்றிக்கொண்டு மேலும் நெருங்கி வந்து மிடுக்குடன் நிற்க, அதைக் கண்டு அஞ்சி அமரர்கள் உருண்டு தனித் தனியே பிரிந்து ஓடாத வண்ணம் வேலாயுதத்தை ஏவிய காப்பாளனே புண்டரிகம் - தாமரை. சண்டம் - கொடுமை. தண்டம் - தண்டனை. மண்டலம் - வட்டம்; இங்கே படையின் வியூகம். அண்டர் - தேவர். அண்டம் - வானுலகம். மண்டி - நெருங்கி, மிண்ட- மிடுக்குடன் இருக்க. விண்டு - பிரிந்து.) உன்னுடைய திருவடியின்பத்தைத் தந்தருள்வாயாக என்பது கருத்து. இது கந்தர் அலங்காரத்தில் 92ஆவது பாடல். 2CO