பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஓர் அந்தியில்,
பழக்கமான அந்தப்
பசும்புல் கம்பளத்தில் அமர்ந்தவாறு
நாம் கண்களின் மொழியைக்
கெளரவப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

யாரோ ஒருவன் தடையாய் வருகிறான்.
வாயைத் திறக்கிறான்;

"நான் தேவன்.
இதோ, இந்தக் கனியைக் கொடுக்கவே வந்தேன்;
இதை உண்டால்
உன்மேனி,
சுக்கைப்போல் உலராது;
உன் இளமை
கடற்கரையில் பதிந்த அடிச்சுவட்டைப்போல்
விரைவில் அழியாது.
ஒவ்வோர் இரவும் நீ உறங்கும் போது
உன்னுள் பரவும்
நரையும் திரையும் மூப்பும்
உன்னை விட்டு ஓடும்.
ஓராயிரம் ஆண்டுகள்
யயாதியைப் போல்
நீ வாலிபத்தின் வாசனையை
நுகர்ந்து கொண்டிருக்கலாம்.
இந்தா, பெற்றுக்கொள்;
இதற்குப் பதிலாக
இந்தக் கன்னியைத் துறந்துவிடு"

வந்தவன் வாய் ஒருவாறு ஓய்கிறது.

நான் அமைதியாகச் சிரிக்கிறேன்;

101