இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
‘இது தவறு’ என்று
என் ஆருயிர்த் தோழர் ஒருவர்
தினமும் இடித்துரைக்கிறார்.
ஒரு வேளை தவறாகவே இருக்கலாம்.
எனினும்
இந்தத் தவற்றைப் புரியும்
ஒவ்வொரு நொடியும்
ஒரு தவம் புரிவதைப் போல்
என்னை ஆக்கிக் கொள்கிறேன்.
எதிர்பார்த்துக் காத்திருந்து
உன்னை நெருங்கும்போது
வெடிமருந்துச் சாலையருகே
கொள்ளிக் கட்டையோடு
கவனமின்றிப் போகும்
ஒரு பேதையைப் போல்
நடந்து கொள்ளப் போகிறேன்
என்று அவர் கவலைப் படுகிறார்.
நானோ,
மூலத்தானம் அருகே
திருவிளக்கேந்திச் செல்லும்
அடியவனைப் போல்
ஆனந்தமடைகிறேன்.
34
52