பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 


நீ இல்லாமல் நான் எப்படி இருக்க முடியும்?

இராமன் இல்லாத தேர், சுமந்திரன் கண்
ணுக்குச் சூனியமாகத் தெரிந்ததைப் போல்
இந்த உலகம் இனி எனக்குச் சூனியமே.

பாரி இல்லாத பறம்பு, கபிலன் பார்வைக்குப்
பாழாய் விரிந்ததைப் போல்
எல்லாம் இனி எனக்குப் பாழே.

வந்த நோக்கம் நிறைவேறாமல் நான் புறப்
பட்ட இடத்திற்குத் திரும்பப் போகிறேன்.

பஞ்ச பூதங்களும் என்னைப் பாசத்தோடு
எதிர்பார்க்கின்றன.

வெளி என்னை விளிக்கிறது.

அந்திக் காற்று என்னை அழைக்கிறது.

என் இடது கால் முன்னே நிற்கிறது.

போகுமுன்...

என் கையால் ஏதேனும் உனக்குத்
தராவிட்டால் என் இதயம் அமைதி
அடையாது.

நீ எனக்குக் காதலைத் தந்தாய்;
அது உழைப்பாளியின் வியர்வையைப் போல்
உயர்வானது.

நான் உனக்கு இந்த வசன காவியத்தைத்
தருகிறேன்; இது, ஏழையின் கண்ணிரைப்
போல் உண்மையானதா என்று பார்.