பக்கம்:கனிச்சாறு 1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  93

65  உரம் இழந்தீரா?

நிலை தளராதா? - இந்திக்
களை உலராதா?
நெடு நெடுவென, தளதளவெனப்
பயிர் வளராதா? - தமிழ்ப்
பயிர் வளராதா?

அறம் சிறக்காதா? - நெஞ்சில்
மறம் பிறக்காதா?
அன்று பிறந்த தமிழர் போலத்
திறம் இருக்காதா? - மானத்
திறம் இருக்காதா?

இகழ் நடக்காதா? - இன்பப்
புகழ் கிடைக்காதா?
இரும்புத் தோள்கள் முனைந்துவிட்டால்
துயர் துடைக்காதா? - நாடு
உயர் வடையாதா?

வெயர்வை சிந்தீரா? - உங்கள்
அயர்வை நொந்தீரா?
வீட்டுக் கதவைத் திறந்து கொண்டே
படைக்கு முந்தீரா? - துயர்
துடைக்க வந்தீரா?

உரம் இழந்தீரா? - அடிமைத்
திறம் விழைந்தீரா?
உலகை யாண்ட தமிழர் நீவிர்
உடல் குலைந்தீரா? - நாடு
கெடல் முனைந்தீரா?

-1959
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/120&oldid=1419128" இலிருந்து மீள்விக்கப்பட்டது