பக்கம்:கனிச்சாறு 1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 கனிச்சாறு – முதல் தொகுதி


66  தூள் தூள் தூளே!

ஊராளும் தலைவர்க்கே ஒன்றுரைப்போம்;
உணர்கஅவர்; “ஒண்ட மிழ்த்தாய்ப்
பேராளும் இடத்திலெல்லாம் பிள்ளைமொழி
இந்தியினைப் புகுத்து கின்றீர்!
சீராளும் செந்தமிழர் பொறுத்திருந்தார்!
இனிப்பொறுக்கார்! புலியைப் போல,
ஏராளம் தமிழ்நிலத்தில் அவர் எழின், உம்
எண்ணமெலாம் தூள் தூள் தூளே!"

 
1963


67  வெள்ளம் வருமுன் அணை!

மொழிப்பற்று, தீதென்றால் இந்திக்கு
முதன்மைதரல் தீதா காதா?
பழிப்புற்ற அம்மொழியைச் செந்தமிழ்ப்பால்
பருகுகின்ற சிறுவர்க் கூட்டிச்
செழிப்புற்ற நல்லுணர்வைக் கெடுப்பதுதான்
சிறப்பான அறமோ சொல்வீர்!
விழிப்புற்றுத் தமிழரெலாம் எழல்வேண்டும்;
வெள்ளம் முன் அணைபோ டற்கே!

 
-1963


68  நன்றே செய்வீர்!

செந்தமிழ்க்குக் காப்பளியா அரசியலைச்
சிதைத்தொழிப்பீர்; தமிழர்க் கென்றும்
சொந்தமிலாக் குலமுறையைக் கடிந்தெறிவீர்;
சோற்றுக்குத் தமிழை விற்றே
எந்தமிழ்க்கு வாழ்வளியா ஏடுகளை
எரியிடுவீர்; தமிழர் நாட்டில்
இந்திக்கு வால்பிடிப்பார் எவரெனினும்
அவர் முகத்தில் உமிழ்வீர் நன்றே!

-1963
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/121&oldid=1513129" இலிருந்து மீள்விக்கப்பட்டது